உள்ளாட்சி தேர்தலில் கலக்கும் ஒய்எஸ்ஆர் கட்சி.. 12 மாநகராட்சிகளையும் அள்ளிய ஜெகன்.. என்ன காரணம்?
அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏற்கெனவே முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை காட்டிலும் அதிக இடங்களில் வென்றார் ஜெகன் மோகன் ரெட்டி.
175 சட்டசபை தொகுதிகளில் 151 தொகுதிகளில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போட்டியிட்டு வென்றது. தெலுங்கு தேசம் கட்சியோ 23 இடங்களிலும் வென்றது. நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியை சேர்ந்த ஒரு எம்எல்ஏ வென்றார். ஆனால் காங்கிரஸ், பாஜக ஒரு இடங்களில் கூட வெல்லவில்லை. ஆந்திரா, தெலுங்கானா என இரண்டாக பிரிக்கப்பட்ட பிறகு நடந்த இரண்டாவது தேர்தல் இதுவாகும்.

கூட்டணி
கடந்த 2014 ஆம் ஆண்டு தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி, ஜன சேனா கட்சி, பாஜக ஆகியன கூட்டணி அமைத்து 103 இடங்களில் இந்த கூட்டணி வென்று சந்திரபாபு நாயுடு வென்றார். அந்த தேர்தல் முதலே ஜெகன் மோகன் ரெட்டி 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி வந்தார். கடந்த 2017ஆம் ஆண்டு 3,600 கி.மீ. தூரத்திற்கு நடைப்பயணம் மேற்கொண்டார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, அக்கட்சியினரின் ஊழல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து பிரச்சாரத்தில் ஜெகன் மோகன் ஈடுபட்டார்.

அசுர வளர்ச்சி
அது போல் 2019 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும் ஆந்திராவில் உள்ள 25 மக்களவை தொகுதிகளில் 22 தொகுதிகளில் ஜெகன் கட்சி வென்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தல்களில் பழைமையான கட்சிகளுக்கு சவால் விடும் அளவுக்கு அசுர வளர்ச்சியை பெற்றுள்ளது.

ஜெகன் கட்சிக்கு வெற்றி
உள்ளாட்சி தேர்தலிலும் ஜெகன் கட்சிக்கு வெற்றிதான். கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி 515 ஜில்லா பரிட்சத் பதவிகளுக்கும் 7220 மண்டல பரிட்சத் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டது. இதன் தேர்தல் முடிவுகள் கடந்த ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியிட தயாரான நிலையில் தெலுங்கு தேசம், பாஜக உள்ளிட்ட கட்சிகள் ஆந்திரா ஹைகோர்ட்டில் வாக்கு எண்ணிக்கைக்கு எதிராக தடை கோரினர்.

மாநகராட்சிகள்
இதையடுத்து வாக்கு எண்ணிக்கையை நடத்துமாறு கடந்த வியாழக்கிழமை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 553 இல் 547 ஜில்லா பரிட்சத்துகளில் வென்றுள்ளது. இது போல் 75 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 74 இடங்களில் ஒய்எஸ்ஆர் வென்றுள்ளது. அனைத்து மாநகராட்சிகளையும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸே கைப்பற்றியுள்ளது.

ஜெகன் கட்சிக்கு ஏன் முக்கியத்துவம்
இது போல் ஜெகன் அண்ணா ஜெகன் அண்ணா என மக்கள் அவரது கட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு காரணம் அவரது ஆட்சியின் நலத் திட்டங்கள்தான் என்கிறார்கள். பெண்கள் நலன், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் நலன், சிறுபான்மையினர் நலன் ஆகியவற்றில் ஜெகன் மோகன் அக்கறை செலுத்துவதும் இந்த அபார வெற்றிக்கு காரணம் என சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications