5 மணிக்கு பிரசவம்… 7 மணிக்கு தேர்வு எழுத வந்த அஞ்சு!
ஜெய்ப்பூர்: பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவி என்பார்கள். அந்த அளவிற்கு பெண்களுக்கு வலி நிறைந்த சிக்கலான விசயம் குழந்தை பெற்றுக்கொள்வது. குழந்தை பிறந்த பின்னர் பெண்களுக்கு ஏற்படும் சோர்வும்,மயக்கமும் தெளியவே சில மணிநேரங்கள் ஆகும். ஆனால் ஜெய்பூரிலோ ஒரு பெண் பிரசவித்த இரண்டு மணி நேரத்தில் தேர்வு எழுதப்போன சம்பவம் அரங்கேறியுள்ளது.
அந்த வீரப்பெண்மணியின் பெயர் அஞ்சுமீனா என்பதாகும். இவர் பி.ஏ. வரலாறு படித்து வருகிறார். படித்துக்கொண்டிருக்கும் போதே திருமணம் நடந்துவிட்டது. ஆனாலும் தன்னுடைய ஆசை ஆசையான படிப்பை கைவிடவில்லை அஞ்சு. இவருடைய பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒன்றாகவே அமைந்துவிட்டது. பரிட்சை எழுத முடியாதோ? ஒரு வருடம் வீணாகிவிடுமோ என்று அஞ்சிய அஞ்சு அசராமல் பிரசவ தேதியையும், தேர்வு தேதியையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்.
அந்தநாளும் வந்தது. தேர்வுக்காக இரவெல்லாம் கண் விழித்து படித்த அஞ்சுவிற்கு அதிகாலை 4 மணிக்கு பிரசவ வலி எடுத்தது. ஜெய்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் 5 மணிக்கு சுகப்பிரசவத்தில் அழகான குழந்தைக்கு தாயானார் அஞ்சு. பிரசவித்த சோர்வோ, வலியோ எதுவும் இன்றி 7 மணிக்கு தேர்வு எழுத மருத்துவமனையில் இருந்து கிளம்பினார்.
தேர்வு நடைபெறும் மகிளா மகாவித்யாலயா கல்லூரிக்கு சென்று படித்த அனைத்தையும் சரசரவென மூன்று மணிநேரத்திற்கு எழுதி முடித்தார் அஞ்சு. மனமிருந்தால் மார்க்கமுண்டு என்ற பழமொழிக்கு உதாரணமாக திகழ்ந்துள்ளார் அஞ்சு.
நம் ஊரிலே குழந்தை பிரசவித்த பெண்களை பத்து நாளைக்காவது வீட்டை விட்டு வெளியே போக விடமாட்டார்கள். ஆனா ஜெய்ப்பூரிலோ பிரசவித்த 2 மணிநேரத்தில் கல்லூரி தேர்வை எழுதி வரலாற்றில் இடம்பெற்றுள்ளார் அஞ்சு. ராஜஸ்தான் பத்ரிகா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இது குறித்து கருத்து கூறியுள்ள அஞ்சு, பிரசவம் என்பது பெண்களுக்கு மறுபிறவிதான். ஆனால் நான் இந்த தேர்வினை எழுதாவிட்டால் என்னுடைய ஒரு ஆண்டு வாழ்க்கையும் வீணாகிவிடுமே என்று அசால்டாக கூறினார். போல்டான லேடிதான் அஞ்சு.












Click it and Unblock the Notifications