சீனாவை பின்னுக்கு தள்ளிய கொரோனா தொற்று! இப்போ இந்தியாதான் டாப்: வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
சிம்லா: கொரோனா தொற்றுக்கு பிறகு சீனாவை நம்பியிருக்கும் ஆபத்தை உலக நாடுகள் உணர்ந்திருப்பதாகவும், எனவே இந்தியாவுக்கான வாய்ப்புகள் சர்வதேச அளவில் அதிக அளவில் குவிந்திருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியிருக்கிறார்.
சர்வதேச அளவில் அமெரிக்காவுக்கு சவால் விடும் வகையில் சீனா பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. ஒட்டுமொத்த ஆசிய கண்டத்தில் சீன தயாரிப்பு பொருட்கள்தான் அதிக அளவில் பரவி கிடக்கின்றன. இந்த அளவுக்கு பலமிக்க பொருளாதாரம், கொரோனா தொற்றுக்கு பின்னர் மெல்ல சரிவை கண்டிருக்கிறது. இந்த சரிவு தற்காலிகமானதுதான் என்றும், விரைவில் நாடு இதிலிருந்து மீண்டுவிடும் எனவும் அந்நாட்டு அரசு நம்பிக்கை தெரிவித்திருந்தது.

ஆனால் 2023ம் ஆண்டில் இந்த மீட்சி ஏற்படவில்லை. 2024 புத்தாண்டு உரையில் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங், இந்த பொருளாதார சிக்கலை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் அதிலிருந்து நாடு விரைவில் மீட்கப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
"கடந்த ஆண்டு மிகவும் சிரமமாக இருந்திருக்கிறது. மக்கள் வேலை தேடுவதிலும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதிலும் நெருக்கடிகளை எதிர்கொண்டனர். இதற்கு எதிராக நாங்கள் நாட்டின் நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சிக்காக உழைத்து வருகிறோம். பொருளாதார மீட்சியின் வேகத்தை ஒருங்கிணைந்து செயல்படுத்துவோம்.
இந்த அரசின் குறிக்கோள், மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை வழங்குவதுதான். நாடு முழுவதும் உள்ள இளைஞர்களுக்கு சிறந்த கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளையும், முதியோர்களுக்கு சுகாதாரத்தையும் நாங்கள் உறுதியளிக்கிறோம்" என்று கூறியுள்ளார்.
சீனா உலகின் பல நாடுகளை காட்டிலும் வித்தியாசமான பொருளாதார முறையை பின்பற்றி வருகிறது. கல்வி, மருத்துவம் என்பது அந்நாட்டின் அடிப்படை வசதிகளில் ஒன்று என்பதால் இதற்காக நிறையை மெனக்கெடுகிறது. அதேநேரம் எந்த மாதிரியான கொள்கைகளை சீனா பின்பற்றி வருகிறது என்பதை வரையறுப்பது கடினமாக இருக்கிறது. அல்லது கொள்கை குறித்த வெளிப்படைத்தன்மையை சீன அரசு விரும்பவில்லை.
இது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே சீனாவிலிருந்து முதலீடுகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளை நோக்கி திரும்பி இருக்கின்றன. மட்டுமல்லாது வீடியோ கேம் குறித்த அந்நாட்டு அரசின் சமீபத்திய அறிவிப்பு, வீடியோ கேம் நிறுவனங்களிடையே பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியது. இவையெல்லாமும் சேர்ந்து சீனாவின் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இந்த பின்னணியில்தான் இந்தியாவுக்கான வாய்ப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தின் சிம்லாவில் பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர்களுடன் கலந்துரையாடிய ஜெய்சங்கர் இதனை கூறியுள்ளார்.
"கொரோனா தொற்று காலத்தில் சீனா குறித்து உலக நாடுகள் உஷாராகியுள்ளன. மிகச் சாதாரண பொருட்கள் கூட அதுவரை சீனாவிலிருந்து இறக்குமதி செய்த உலக நாடுகள், கொரோனா தொற்று காலத்தில் பொருட்களை பெற முடியாமல் தவித்தன. எனவே இந்தியாவை நோக்கி அந்நாடுகள் திரும்பியுள்ளன.
டிஜிட்டல் தன்மை, வணிகத்தில் நிலையான தன்மை, தலைமைத்துவம், நல்ல நிர்வாகம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் உலக வணிகத்தை இந்தியாவை நோக்கி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இனி உலக நாடுகள் இந்தியாவை நோக்கி வரும். எனவே வளர்ச்சி என்பது இனி அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.
ஒன்றிரண்டு மாநிலங்களின் வளர்ச்சியை மட்டும் குறி வைத்து வளர்வது என்பதை மட்டும் கருத்தில் கொள்ளாமல், அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய வளர்ச்சியை சாத்தியப்படுத்த வேண்டும்" என்றும் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications