ஜல்லிக்கட்டு கலாசார நிகழ்வு- மத்திய அரசின் அறிவிக்கை சரியானதே- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு
டெல்லி: கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்காக மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கை சரியானதே என்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிக்கை ஒன்றை வெளியிட்டது.
ஆனால் இது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது எனக் கூறி பிராணிகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு மீண்டும் நீதிமன்றத்துக்கும் போனது. இதனால் மத்திய அரசின் அறிவிக்கைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.
இத்தடையால் பொங்கல் விழாவின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படவில்லை. இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இத்தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது.
இவ்வழக்கில் தமிழக அரசுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். இந்த வழக்கு விசாரணை வரும் 15-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தது.
அதில், கலாசார நிகழ்வான ஜல்லிக்கட்டு போட்டிக்கும் மற்ற விளையாட்டுகளுக்கும் வித்தியாசம் உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கை சரியானது என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.