ஜம்மு காஷ்மீர்: நாளை 'பைனல்'- 40 தொகுதிகளில் 17 மாஜி அமைச்சர்கள் உட்பட 415 வேட்பாளர்கள் போட்டி!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் நாளை இறுதி கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. 40 சட்டசபை தொகுதிகளில் நாளை நடைபெறும் தேர்தல் களத்தில் 17 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 415 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். 40 தொகுதிகளில் 39.18 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க 5,060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபையில் மொத்தம் 90 இடங்கள் உள்ளன. சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல் கட்ட தேர்தல் 24 தொகுதிகளில் செப்டம்பர் 18-ந் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் மொத்தம் 61.1% வாக்குகள் பதிவாகின. 26 தொகுதிகளில் செப்டம்பர் 25-ந் தேதி நடைபெற்ற 2-ம் கட்ட தேர்தலில் 57.3% வாக்குகள் பதிவாகின. இதனையடுத்து எஞ்சிய 40 இடங்களுக்கான தேர்தல் நாளை (அக்டோபர் 1) நடைபெற உள்ளது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மொத்தம் 16 சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன; ஜம்மு பிராந்தியத்தில் மொத்தம் 24 தொகுதிகளில் தேர்தல் நடைபெற உள்ளன.
ஜம்மு காஷ்மீர் 3-வது கட்ட தேர்தல் மொத்தம் 7 மாவட்டங்களில் நடைபெறுகிறது. இதற்காக 5060 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம் 20,000-க்கும் அதிகமான தேர்தல் பணியாளர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் 3-வது கட்ட தேர்தலில் மொத்தம் 39,18,220 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். ஆண் வாக்காளர்கள் 20,09,033; பெண் வாக்காளர்கள் 19,40,092; மூன்றாம் பாலினத்தவ்ர் 57. முதல் முறையாக வாக்களிப்போர் அதாவது 18-19 வயது வாக்காளர்கள் மட்டும் 1.94 லட்சம். மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் 35,860 மற்றும் மூத்த குடிமக்கள் 32,953 வாக்காளர்கள் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.
3-வது கட்ட தேர்தலில் மொத்தம் 415 பேர் வேட்பாளர்களாக களம் காண்கின்றனர். இவர்களில் 17 பேர் முன்னாள் அமைச்சர்கள், 7 பேர் முன்னாள் எம்.எல்.ஏக்கள், 4 பேர் விருப்ப ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள்.
இதர 2 கட்டங்களைப் போலவே ஜம்மு காஷ்மீரில் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறும். ஜம்மு காஷ்மீரில் தேர்தலை சீர்குலைக்க பயங்கரவாதிகள் தொடர்ந்து பாதுகாப்புப் படையினரைத் தாக்கி வருவதால் முழு உஷார் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜம்மு காஷீரில் முதல் 2 கட்ட தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது. 3-வது கட்ட தேர்தலின் போது லெபனானில் ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லாவை இஸ்ரேல் படுகொலை செய்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 3-வது கட்ட தேர்தலின் இறுதிப் பிரசாரங்களை தலைவர்கள் மேற்கொள்ள முடியாத வகையில் போராட்டங்கள் நடந்தன. இதனால் ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications