ஜம்மு காஷ்மீர் கனமழை.. வைஷ்ணவி தேவி கோயில் அருகே நிலச்சரிவு.. 31 பேர் உயிரிழப்பு
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வைஷ்ணவி தேவி கோயில் புனித யாத்திரையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 31 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். பலர் நிலச்சரிவில் இடிபாடுகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தாவி, பசந்தார், செனாப் நதிகளில் வெள்ளப் பெருக்கு அதிகம் ஏற்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. சாலை, பாலங்கள் சேதமடைந்துள்ளதால். சாலை மற்றும் ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்கள், அரசு, தனியார் அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவை மட்டுமே இயங்கும் என்று ஜம்மு காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. முக்கியமாக ஜம்மு காஷ்மீரில் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 40 மணி நேரத்திற்கு அங்கு மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கட்டிடங்கள், செல்போன் டவர்கள் சேதமடைந்துள்ளதால் பெரும்பாலான பகுதிகளில் தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. சுமார் 3,500 மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால் மின் இணைப்பும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு - ஶ்ரீநகர் - கிஷ்த்வார் - தோடா தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பல ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் நிலைமை மோசமாக இருப்பதாக கூறியுள்ள அம்மாநில முதல்வர் உமல் அப்துல்லா, உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். இன்று அவர் விமானம் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்யவுள்ளார்.
மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று கூறியுள்ளனர். நிலச்சரிவு, வெள்ள பாதிப்பு அபாயம் உள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தவும், மக்களுக்கு உணவு, தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் உமர் அப்துல்லா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொடர் மழை காரணமாக ஜம்மு காஷ்மீரில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரபல வைஷ்ணவி தேவி கோயில் புனித யாத்திரை வழித்தடத்தில் ஏற்பட்ட திடீர் நிலச்சரிவில் சிக்கி 31 பக்தர்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 23 பக்தர்கள் காயமடைந்துள்ளனர். மேலும் சில பக்தர்கள் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர்.
பேரிடர் மீட்பு படை, காவல்துறை, தீயணைப்புத்துறை, தன்னார்வலர்கள் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், அதிகாலை 3 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக வைஷ்ணவி தேவி கோயில் புனித யாத்திரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
யாத்திரை வந்த பக்தர்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளோம். இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு தான் வைஷ்ணவி தேவி கோயிலுக்கான புனித யாத்திரையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளோம். என்று கூறினார்கள். இந்த சம்பவம் ஜம்மு காஷ்மீரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications