ஜம்மு காஷ்மீர்: காங்கிரஸுக்கு வேட்டு ரெடி- 4 சுயேட்சைகள் ஆதரவு தருவதால் என்சி-க்கு பெரும்பான்மை!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற 7 சுயேட்சைகளில் 4 பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தேசிய மாநாட்டுக் கட்சியின் பலம் 46 ஆக அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மைக்கு தேவையான 46 இடங்களை தேசிய மாநாட்டுக் கட்சியே பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சி அச்சத்தில் இருக்கிறது.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபை தேர்தலில் 42 இடங்களில் தேசிய மாநாட்டுக் கட்சி, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 6, சிபிஎம் 1 இடத்தில் வென்றது. ஜம்மு காஷ்மீரில் பெரும்பான்மைக்கு தேவை 46 இடங்கள். ஆனால் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணியோ 49 இடங்களைப் பெற்றது. இதனால் தேசிய மாநாட்டுக் கட்சி- காங்கிரஸ்- சிபிஎம் கூட்டணி ஆட்சி அமைகிறது.

தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் இணக்கமாகவே செயல்படப் போகிறோம் என முதல்வராகப் பொறுப்பேற்கும் ஒமர் அப்துல்லா கூறி வருகிறார். பாஜகவை பகைத்துக் கொள்ளமாட்டோம் என்பதாகவே பேசுகிறது தேசிய மாநாட்டுக் கட்சி. குறிப்பாக 370-வது பிரிவு விவகாரத்தில் மத்திய அரசு எதுவும் செய்யாது; ஆகையால் மக்களை முட்டாளாக்காமல் அடுத்த வேலையைப் பார்ப்போம்; ஆனாலும் 370-வது பிரிவு தேவை என்பது கொள்கை எனவும் குழப்பமாகவே பேசி வருகிறது தேசிய மாநாட்டுக் கட்சி.
இதனால் தேசிய மாநாட்டுக் கட்சி பாஜகவுடன் கை கோர்க்குமோ என அச்சத்தில் இருக்கும் காங்கிரஸுக்கு அடுத்த அதிர்ச்சி கிடைத்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் தேர்தலில் மொத்தம் 7 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர். இவர்களில் 4 பேர் தேசிய மாநாட்டுக் கட்சிக்கே ஆதரவு தருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.
4 சுயேட்சைகள் ஆதரவால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் தேசிய மாநாட்டுக் கட்சி 46 எம்.எல்.ஏக்களைப் பெற்றுள்ளது. காங்கிரஸ் தயவு இல்லாமலேயே பெரும்பான்மை பலம் பெற்றுவிட்டது தேசிய மாநாட்டுக் கட்சி. ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகள் காங்கிரஸை ரொம்பவே கதிகலங்க வைத்துக் கொண்டே இருக்கிறது.












Click it and Unblock the Notifications