370-வது பிரிவு ரத்து நாள்: வீட்டு சிறையில் ஜம்மு காஷ்மீர் மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள்!
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட நாளில் அம்மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் தாங்கள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர். மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் தன்வீர் சாதிக் உள்ளிட்டோர் தங்களை பாதுகாப்புப் படையினர் வீட்டுச் சிறையில் அடைத்துள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 2-வது முறையாக தொடர்ந்து வென்ற பாஜக மத்தியில் ஆட்சி அமைத்ததும் தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் இதே ஆகஸ்ட் 5-ந் தேதி 370-வது பிரிவை ரத்து செய்தது.

அத்துடன் ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலத்தை இரண்டாகப் பிரித்து ஜம்மு காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக்கியது. ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டனர். மிக நீண்டகால சிறைவாசத்துக்குப் பின்னரே அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்தது. இந்த நிலையில் 370-வது ரத்து செய்யப்பட்ட நாளான இன்று ஜம்மு காஷ்மீரில் பதற்றம் நிலவுகிறது. இன்றைய நாளில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் நடத்தக் கூடும் என்பதால் அம்மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கையாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அமர்நாத் யாத்திரை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே ஜம்மு காஷ்மீர் மாநில அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தாங்கள் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அம்மாநில முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சியான பிடிபியின் தலைவருமான மெகபூபா முப்தி, தேசிய மாநாட்டுக் கட்சியின் செய்தித் தொடர்பாளர் தன்வீர் சாதிக் ஆகியோர் தங்களை பாதுகாப்புப் படையினர் வீட்டுச் சிறைகளில் அடைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் பல அரசியல் கட்சிகளின் அலுவலகங்களையும் பாதுகாப்புப் படையினர் இழுத்துப் பூட்டிவிட்டனராம்.












Click it and Unblock the Notifications