ஜம்மு காஷ்மீர் படுகொலை: நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் குறித்து மத்திய அரசு தீவிர ஆலோசனை!
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பஹல்காம் படுகொலைகள் தொடர்பாக விவாதம் நடத்த நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதைத் தொடர்ந்து மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பஹல்காம் சுற்றுலா தலத்தில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவித் தாக்குதல் நடத்தியதில் 26 சுற்றுலா பயணிகள் பலியாகினர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஜம்மு காஷ்மீர் சென்றார். அங்கு முகாமிட்டு பாதுகாப்பு தரப்பினருடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் பஹல்காம் பகுதியிலும் நேரில் ஆய்வு நடத்தினார்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் போது சவூதி அரேபியாவில் இருந்த பிரதமர் மோடி உடனடியாக நாடு திரும்பினார். டெல்லி விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி அவசர ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தினர். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து நாட்டின் பாதுகாப்பு நிலவரங்களை விவரித்தார் மத்திய அமைச்சர் அமித்ஷா. டெல்லியில் அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும் நடத்தப்பட்டது.
மேலும், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து; பாகிஸ்தானியர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற்றம் உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதனையடுத்து டெல்லியில் மீண்டும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் மற்றும் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, முப்படையினர் சுதந்திரமாக செயல்பட உத்தரவிட்டார் பிரதமர் மோடி. இந்த பின்னணியில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
இதனிடையே மத்திய அரசின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு தருவதாக அறிவித்துள்ள எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை நடத்தி ஜம்மு காஷ்மீர் தாக்குதல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
இதனடிப்படையில் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரை கூட்டுவது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications