ராணுவத்தின் டார்ச்சர்.. போராளி ஆக முடிவு.. ஜம்மு காஷ்மீர் எம்எல்ஏ வாழ்வில் நடந்த அந்த ட்விஸ்ட்
ஜம்மு காஷ்மீர்: அமரன் திரைப்படம் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல விமர்சனங்களும் எழுந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அமரன் படத்தை போலவே அங்கு மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. சிட்டிங் எம்எல்ஏ ஒருவர் தன் இளமை பருவத்தில் ராணுவத்தால் சில கொடுமைகளை அனுபவித்து போராளி ஆகும் முடிவில் இருந்துள்ளார். ராணுவ உயரதிகாரி ஒருவரின் செயல்பாட்டால் எம்எல்ஏ அந்த முடிவை கைவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ஜி.வி பிரகாஷ் இசையில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் வணிக ரீதியாகவும் வசூலை குவித்து வருகிறது.

அமரன் படம் மேஜர் முகுந்த் வரதராஜன் என்ற ராணுவ அதிகாரியின் பயோ பிக்காக எடுக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் சிறப்பாக பணியாற்றிய முகுந்த், ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014 ஆம் ஆண்டு தீவிரவாதிகளுடனான மோதலின் போது மரணமடைந்தார். இந்தப் படத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் முதல் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், சினிமா பிரபலங்களும் அமரன் படத்தை பாராட்டி வருகின்றனர்.
அதே நேரத்தில் அமரன் படத்துக்கு எதிராக விமர்சனங்களும், போராட்டங்களும் நடந்து கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மக்களின் மண் உரிமைப் போராட்டத்தை பற்றிய புரிதல் இல்லாமல், அவர்களை தவறாக சித்தரித்துள்ளதாக கண்டனங்களும் வலுத்து வருகின்றன. இந்நிலையில் ஜம்மு காஷ்மீரின் எம்எல்ஏ ஒருவர், தனது இளமை பருவத்தில் ராணுவ அதிகாரியால் ஏற்பட்ட பாதிப்புகளை பகிர்ந்துள்ளார்.
அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜம்மு காஷ்மீரில் உள்ள இளைஞர்களை சந்தித்து பேசுவார். அதேபோல அந்த எம்எல்ஏவிடம் ராணுவ உயர் அதிகாரி சிஸ்டத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். ஜம்மு காஷ்மீரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தது. சட்டசபை முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது.
தேசிய மாநாடு கட்சி சார்பில் லோலப் தொகுதியில் போட்டியிட்டு வென்றவர் க்கைசர் ஜம்ஷெத் லோன். இவர் எம்எல்ஏவாக பேசிய முதல் உரை வைரலாக பரவி வருகிறது. ஜம்ஷெத், நான் 10 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது எங்கள் ஊரில் பதற்றமான சூழல் வெடித்தது. என்னுடன் சேர்த்து 32 இளைஞர்களை ராணுவத்தினர் தனியாக விசாரணை நடத்தினார்கள்.
தீவிரவாத குழுவில் இணைந்த இளைஞர் குறித்து ராணுவ அதிகாரி கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட அந்த இளைஞர் எங்கள் பகுதியை சேர்ந்தவர் என்பதால் அவரை தெரியும் என்று கூறினேன். அதற்கு அந்த அதிகாரி என்னை அடித்துவிட்டார். தீவிரவாதிகள் குறித்து மேலும் சில கேள்விகளை கேட்டனர். அதுப்பற்றி எனக்கு தெரியவில்லை. இதனால் என்னை மீண்டும் அடித்துவிட்டனர்.
ராணுவத்தினர் தொடர்ந்து செய்த டார்ச்சரை தாங்க முடியவில்லை. அதனால் போராளி ஆகிவிடலாம் என்று நினைத்தேன். அந்த இடத்துக்கு ஒரு ராணுவ உயரதிகாரி வந்து வாழ்க்கையில் உனக்கு என்ன ஆக வேண்டும் என லட்சியம் என்று கேட்டார். அதற்கு நான் போராளி ஆக வேண்டும் என்று கூறினேன். அவர் ஏன் என்று கேட்டதற்கு நாங்கள் சந்திக்கும் இன்னல்களை கூறினேன்.
அவர் தனக்கு கீழ் பணியாற்றும் அதிகாரியை அழைத்து அனைவர் முன்னிலையிலும் கண்டித்தார். அவரின் செயல்கள் எனக்கு நம்முடைய சிஸ்டத்தின் மீது நம்பிக்கை உருவானது. இருப்பினும் என்னுடன் விசாரிக்கப்பட்ட 32 இளைஞர்களில் 27 பேர் போராட்டக் குழுவில் இணைந்தனர் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications