ஜம்முவில் தேர்தல் பிரசாரத்திற்கு சென்ற சித்து கார் மீது கல்வீச்சு: கார் கண்ணாடிகள் நொறுங்கின
காஷ்மீர் மாநில சட்டசபையின் மொத்தமுள்ள 87 தொகுதிகளுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகின்றது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துவிட்ட நிலையில், 5ம் கட்ட வாக்குப்பதிவு வரும் 20ம்தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி பாஜகவை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, காந்திநகர் சட்டசபை தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் கவிந்தர் குப்தாவுக்கு ஆதரவு திரட்டி இன்று ஜம்முவுக்கு சென்றிருந்தார்.

அப்போது அவர் பயணித்த இனோவா காரை சூழ்ந்து கொண்ட சில இளைஞர்கள், கார் கண்ணாடியை அடித்து உடைத்தனர். காரை நோக்கி கல்வீச்சிலும் ஈடுபட்டனர். இருப்பினும் பாதுகாப்புக்கு வந்த போலீசார் காரை சூழ்ந்து நின்று கொண்டு கல்வீச்சை தாங்கள் பெற்றுக் கொண்டனர். ஒருவழியாக கார் அங்கிருந்து நகர்த்தி செல்லப்பட்டது.
இந்த சம்பவத்தில் காரின் அனைத்து பக்க கண்ணாடிகளும் உடைந்து நொறுங்கிவிட்டன. நடுவரிசை இருக்கையில் அமர்ந்திருந்த சித்து, காயமின்றி தப்பினார். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யார், அவர்கள் பின்புலம் என்ன என்பது குறித்து விசாணை தொடங்கியுள்ளது.
இதனிடையே, தோல்வி பயம் காரணமாக தற்போதைய காந்திநகர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏதான் ஆள் வைத்து சித்து மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் அருண் குப்தா கூறுகையில், சித்து மீது தாக்குதல் நடத்தியவர்கள் காங்கிரஸ் எம்.எல்.ஏவுக்கு ஆதரவாக வாழ்த்து கோஷங்களையும் எழுப்பியுள்ளனர் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications