தாமரையைத் தொட்டது தப்பாப் போச்சு.. பாஜகவை விட்டு விலகினார் ஜஸ்வந்த் மகன்!
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் பாஜகவுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திர சிங் கட்சியை விட்டு விலகியுள்ளார்.
பாஜகவில் நான் சேர்ந்ததே ஒரு பெரிய தப்பு என்றும் அவர் விமர்சித்துள்ளார். ராஜஸ்தானின் பார்மர் நகரில் இன்று ஸ்வாபிமான் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட பிறகு தனது விலகல் முடிவை அறிவித்தார் மன்வேந்திர சிங். தாமரையைத் தேர்வு செய்தது தப்பாக போய் விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

பார்மர் இவரது தொகுதியாகும். இந்தத் தொகுதியில் தற்போது ஸ்வாபிமான் பேரணியை அவர் நடத்தி வருகிறார். சுயமரியாதையைக் காப்போம் என்ற பெயரில் இந்த பேரணியை அவர் நடத்தி வருகிறார். வாக்காளர்களை சந்தித்து வருகிறார். இத்தொகுதியிலிருந்து முன்பு சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மன்வேந்திர சிங்.
ராஜஸ்தான் சட்டசபைக்குத் தேர்தல் வரவுள்ள நிலையில் மன்வேந்திர சிங் கட்சியை விட்டு விலகியிருப்பது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த லோக்சபா தேர்தலில் ஜஸ்வந்த் சிங்குக்கு பாஜக டிக்கெட் தர மறுத்தது. அது முதலே மன்வேந்திர சிங் கட்சி மீது அதிருப்தியுடன் இருந்து வந்தார்.
மன்வேந்திர சிங்கின் விலகல் குறித்து அவரது மனைவி சித்ரா சிங் கூறுகையில், மக்கள் கடும் கோபத்துடன் உள்ளனர். விவசாயிகள் ஆத்திரத்துடன் உள்ளனர். எனது குடும்ப மரியாதை மட்டுமல்ல இது. மாறாக மொத்த மக்களின் மரியாதையும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது என்றார் சித்ரா சிங்.












Click it and Unblock the Notifications