ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை தொடங்க 10 வார காலம் ஆகும்!
டெல்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை இன்னும் 10 வாரங்கள் கழித்த பிறகே விசாரணைக்கு வரும் சூழல் உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்ததை எதிர்த்து கர்நாடக அரசு சார்பில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. திமுகவின் அன்பழகன் மற்றும் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி ஆகியோர், இந்த வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
ஆச்சாரியா வாதம்
இந்த வழக்கு கடந்த 27ம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ராஜேஷ்குமார் அகர்வால், பினாகி சந்திரகோஷ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கர்நாடக அரசுத் தரப்பில் ஆஜரான பி.வி.ஆச்சார்யா, கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு சரியானதல்ல. ஜெயலலிதாவின் வங்கிக்கடன் தொடர்பான கணக்கில் தவறு உள்ளது. எனவே, அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும். கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.
ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ்
இதைக்கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் முக்கியத்துவம் எங்களுக்கு தெரியும். எனவே, எதிர்தரப்பினரின் வாதத்தையும் கேட்க வேண்டும். அதனால், ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 3 வாரத்திற்குள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறோம். பதில் மனு தாக்கல் செய்த பின் கர்நாடக அரசும், அன்பழகனும் அதற்கு பதில் தர வேண்டும். அதன் பின்னர் 2 வாரங்கள் கழித்து இந்த வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உத்தரவிட்டனர். மேலும் ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டனர்.
10 வாரங்கள்
இதனிடையே, ஜெயலலிதா தரப்பு 3 வாரங்கள் கழித்து பதில் மனுவை தாக்கல் செய்த பிறகு, அரசு தரப்பு மற்றும் அன்பழகன் தரப்பு விரிவான பதிலை தாக்கல் செய்ய வேண்டும். இதற்குபிறகுதான் என்று விசாரணை தொடங்கும் என்று அறிவிக்கப்படும். எனவே குறைந்தபட்சம் இன்னும் 10 வாரங்கள் கழித்த பிறகே, அக்டோபர் மாதவாக்கில் வழக்கு விசாரணை தொடரும் என்று சுப்ரீம் கோர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரம்பரியம் மிக்க நீதிபதி
இதனிடையே வழக்கை விசாரிக்கும் இரு நபர் பெஞ்சில் நீதிபதி பினாகி சந்திர கோஸ் பெயர் மட்டும் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றொரு நீதிபதி யார் என்பதை, தலைமை நீதிபதி தத்து, பிறகு அறிவிப்பார். கொல்கத்தாவை சேர்ந்த சந்திரகோஸ், ஆந்திர ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக பதவி வகித்த அனுபவம் உள்ளவர். இவரது தந்தை சம்பு சந்திர கோஸ், கொல்கத்தா ஹைகோர்ட் தலைமை நீதிபதியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.