உச்சநீதிமன்றத்தில் ஜெ. தரப்பு வாதம் தொடக்கம்- ஏப்.5-க்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வாதங்கள் இன்று தொடங்கியுள்ளன. இவ்வழக்கின் விசாரணை ஏப்ரல் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இவ்விசாரணை நடைபெறுகிறது.

இதில் கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா வாதங்களை முன்வைத்துவிட்டனர். இவ்வழக்கின் முதல் புகார்தாரர் என்கிற அடிப்படையில் பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமியும் வாதத்தை முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து இன்று இவ்வழக்கின் அரசு தரப்புடன் சேர்ந்த திமுக பொதுச்செயலர் அன்பழகனின் சார்பாக மூத்த வழக்கறிஞர் அந்தி அர்ஜூனா வாதங்களை முன்வைக்க இருந்தார். ஆனால் நீதிபதிகளோ, நீங்கள் கூற வரும் வாதங்களை ஏற்கனவே கர்நாடகா தரப்பில் தெரிவித்துவிட்டனர்; புதிய வாதங்கள் ஏதும் இருப்பின் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யுங்கள் எனக் கூறி அவரது வாதத்தை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் வழக்கை விரைந்து நடத்த வேண்டியதிருப்பதால் திரும்ப திரும்ப ஒரே வாதங்களை தாங்கள் கேட்க விரும்பவில்லை எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதன் பின்னர் ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் தம்முடைய வாதங்களை முன்வைத்தார். இதன் பின்னர் இவ்வழக்கின் விசாரணை ஏப்ரல் 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் நாகேஸ்வரராவ் தம்முடைய வாதங்களை தொடருவார்.












Click it and Unblock the Notifications