ஜெ., சசி, இளவரசி, சுதாகரன் ஜாமீன் மனுக்கள் மீது இன்று விசாரணை
பெங்களூர்: பெங்களூர் சிறப்பு மாஜிஸ்திரேட் கோர்ட் தனக்கு விதித்த தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், ஜாமீன் கோரியும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதேபோல சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பிலும் ஜாமீன் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களைஉயர்நீதிமன்றத்தின் விடுமுறை கால சிறப்பு நீதிபதி ரத்னகலா விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறார்.
மொத்தம் நான்கு மனுக்களை ஜெயலலிதா தரப்பு வக்கீல் தாக்கல் செய்துள்ளார். அதில் ஒன்று பெங்களூர் தனி நீதிமன்றத் தீர்ப்பை எதிர்க்கும் மேல் முறையீட்டு மனு ஆகும். இது போக, விதிக்கப்பட்டுள்ள தண்டனையை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்டவை மற்ற 3 மனுக்கள் ஆகும்.

கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வகேலாவை நேரில் சந்தித்து மனு செய்யப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் அலுவலகத்தில் வைத்து மனுக்களை அதிமுக வக்கீல்கள் அளித்துள்ளனர்.
தற்போது தசரா விடுமுறையில் உள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம். அக்டோபர் 6ம் தேதி வரை கோர்ட் விடுமுறையாகும். செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பெஞ்ச் அமர்வு நடைபெறும். எனவே ஜெயலலிதாவின் மனு நாளை விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது. நீதிபதி ரத்னகலா இந்த மனுக்களை விசாரிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக அளிக்கப்பட்ட தீர்ப்பைக் கண்டித்துள்ள முன்னாள் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்ட நிபுணருமான ராம்ஜெத்மலானி ஜெயலலிதாவுக்காக ஜாமீன் கோரும் வழக்கில் ஆஜராகவுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக்கோர்ட் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு கூறியது. இதேபோல் அவரது தோழி சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து நால்வரும் பரப்பன அக்ரஹாராவில் உள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தீர்ப்பைத் தொடர்ந்து தனிக்கோர்ட் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா வழங்கிய தீர்ப்பின் நகல் ஜெயலலிதாவின் வக்கீல்களுக்கு கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் அடுத்து கட்ட நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். முதலில் ஜெயலலிதாவை ஜாமீனில் எடுக்க அவர்கள் முயற்சித்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications