விமான நிலையத்தில் இருந்து கோர்ட்டுக்கு காரில் வந்தார் ஜெயலலிதா
பெங்களூர்: எச்.ஏ.எல் விமான நிலையத்தில் இருந்து ஜெயலலிதா சாலை மார்க்கமாக கோர்ட் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா சென்றதையடுத்து குறிப்பிட்ட சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து பெங்களூர் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை: 9.30 மணி முதல் 10.30 மணிவரை பழைய ஏர்போர்ட் ரோடு, கோரமங்களா அவுட்டர் ரிங் ரோடு, சில்க் போர்ட் ஜங்ஷன், ஆகியவற்றின் வழியாக விவிஐபி செல்ல உள்ளதால் கீழ்கண்ட பகுதிகளில் அந்த நேரத்தில் பொது போக்குவரத்து நிறுத்தப்படுகிறது.
கிருபாநிதி கல்லூரி சந்திப்பு, மடிவாளா போலீஸ் ஸ்டேஷன் சந்திப்பு, சில்க்போர்ட் சந்திப்பு, பொம்மனஹள்ளி சந்திப்பு, காரேபாவிபாளையா சந்திப்பு ஆகியவற்றில் போக்குவரத்து நிறுத்தப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஹெலிகாப்டர் மூலமாக கோர்ட்டுக்கு செல்வதாக இருந்தது. இதற்காக ஹெலிபேட் கோர்ட் அருகே அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென சாலை மார்க்கமாக செல்ல ஜெயலலிதா தீர்மானித்தார்.
எச்.ஏ.எல் ஏர்போர்ட்டில் ஜெயலலிதா இறங்கியதும், ஏர்போர்ட் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிறப்பு பஸ் ஒன்றில் ஜெயலலிதா சற்று ஓய்வு எடுத்துக் கொண்டார். இதையடுத்து காரில் அவர் பரப்பன அக்ரஹாரா கோர்ட்டுக்கு வந்தார்.
முன்னதாக அவர் விமான நிலையம் அருகேயுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ஓய்வெடுப்பதாக இருந்தது. ஆனால் கால தாமதம் காரணமாக கேரவன் பஸ்சில் ஓய்வெடுத்துவிட்டு அப்படியே காரில் கிளம்பி வந்தார் ஜெயலலிதா.