சுதாகரன் திருமண செலவை ஜெ. மட்டுமே செய்யவில்லை- சிவாஜி வீட்டாரும் செலவிட்டனர்- வக்கீல் நாகேஸ்வரராவ்
டெல்லி: வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கான செலவை ஜெயலலிதா மட்டுமே செய்யவில்லை; நடிகர் சிவாஜி கணேசன் குடும்பத்தாரும்தான் செய்தனர் என்று உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் நாகேஸ்வராவ் வாதிட்டார்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
கர்நாடகா அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே, பிவி ஆச்சார்யா ஆகியோர் இறுதி வாதங்களை முன்வைத்தார். ஜெயலலிதா தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வர ராவ் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
அவர் இன்றைய வாதத்தின் போது, வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்துக்கு ஜெயலலிதா மட்டுமே செலவு செய்தார் என்பது தவறானது. சிவாஜிகணேசன் மகன் ராம்குமாரும் மற்றொரு நபரும் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி சுதாகரன் திருமணத்துக்கு இருவரும் ரூ97 லட்சம் செலவு செய்ததாக கூறியுள்ளனர்.
இந்த திருமண செலவை ஜெயலலிதா மட்டுமே செய்தார் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமுமே இல்லை என்றார்.