ஜெ.வுக்கு நிம்மதி... சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு!
டெல்லி: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை, ஜூன் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது சுப்ரீம்கோர்ட். தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக வழக்கு விசாரணை முடிவடையும் என்ற எதிர்பார்ப்பு இதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவை விடுதலை செய்தது. இதை எதிர்த்து, கர்நாடக அரசு, திமுகவின் அன்பழகன் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளன.
நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் அமிதவா ராய் முன்னிலையில் நடைபெறும், இந்த வழக்கில், முதலில் கர்நாடக தரப்பும், பின்னர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் தரப்பும் வாதத்தை நிறைவு செய்தன. 2வது சுற்றாக வாதிட கர்நாடக தரப்புக்கு அனுமதியளிக்கப்பட்டது.
கர்நாடக தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா வாதிட்டு வந்தார். இன்றும் தனது வாதத்தை அவர் தொடர்ந்தார். இதையடுத்து, ஜூன் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம், அனைத்து தரப்பும் தங்கள் வாதங்களையும் நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.