மிகக் குறுகிய காலம் சிறைவாசத்தில் ஜாமீன் பெற்ற ஒரே 'தலைவர்' ஜெயலலிதா மட்டுமே..
Subscribe to Oneindia Tamil
சென்னை: ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கிய அரசியல் கட்சித் தலைவர்களில் ஜெயலலிதா மட்டுமே குறைந்த அளவாக 22 நாள் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 22 நாட்களாக பெங்களூரில் சிறைவாசத்தை அனுபவித்தார் ஜெயலலிதா.

உச்சநீதிமன்றத்தில் நேற்றே ஜாமீன் கிடைத்த போதும் நடைமுறைகளால் அவர் இன்றுதான் விடுதலையாக முடிந்தது. ஊழல் மற்றும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் சிக்கிய தலைவர்களிலேயே ஜெயலலிதா மட்டுமே மிகக் குறைந்த அளவாக 22 நாட்கள் சிறைவாசத்தை அனுபவித்தவர்.
- மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பீகார் முன்னாள் முதல்வர் லாலுவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் ஜாமீன் பெறுவதற்கே கடுமையாக போராடினார். 70 நாட்களுக்குப் பின்னரே ஜாமீன் கிடைத்தது.
- ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு ஊழல் வழக்கில் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 2 மாதமாக ஜெயிலில் இருந்த அவர் தன் உடல்நலத்தை காரணம் காட்டி ஜாமீன் பெற்றார். ஆனால் நிபந்தனைகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததால் மீண்டும் சிறைக்குள் போய்விட்டார்.
- ஆந்திராவில் முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் மகனும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவருமாக ஜெகன்மோகன் ரெட்டி மீது சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. விசாரணை நிலுவையில் உள்ள நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீன் பெற முயன்று தோல்வி அடைந்த அவர் 16 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலையானார்.
- கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் சுரங்கத் தொழில் துறையில் கொடி கட்டி பறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. அதில் முறைகேடுகள் செய்ததாக அவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இன்னமும் அவருக்கு ஜாமீன் கிடைத்தபாடில்லை.
- ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா குற்றம் சாட்டப்பட்ட நிலையில் கைது செய்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அது போல கனிமொழி எம்.பி.க் கும் குற்றம்சாட்டப்பட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- விசாரணைக் கைதியாக மட்டுமே இருந்த கனிமொழி 160 நாட்கள் சிறைவாசத்துக்குப் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
- அதேபோல் ராசாவும் விசாரணைக் கைதியாக சிறையில் இருந்த நிலையில் 15 மாத சிறைவாசத்துக்குப் பின்னர் விடுதலையானார்
- இந்தவகையில் ஜெயலலிதாதான் மிகக் குறைந்த அளவாக 22 நாட்கள் மட்டுமே சிறைவாசத்தை அனுபவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications