ஜெ.விற்கு அளித்த சிகிக்சை என்ன.. எய்ம்ஸ் குழுவின் அறிக்கையை டெல்லியில் வெளியிட்டது தமிழக அரசு
மறைந்த ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் டாக்டர்கள் கொடுத்த சிகிச்சை குறித்த அறிக்கை டெல்லியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
டெல்லி: கடந்த டிசம்பர் மாதம் அப்பல்லோ மருத்துவமனையில் மறைந்த ஜெயலலிதாவிற்கு எய்ம்ஸ் டாக்டர்கள் குழு அளித்த சிகிச்சை விவரங்கள் குறித்த அறிக்கையை டெல்லியில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காய்ச்சல் மற்றும் நீர் சத்து குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5ஆம் தேதி மரணமடைந்தார்.
இந்த 75 நாட்களில் 5 முறை டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்தனர். அப்போது அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து எய்ம்ஸ் மருத்துவர்கள் தமிழக அரசிடம் அறிக்கையை தாக்கல் செய்து உள்ளனர்.

ஜெ. மரணத்தில் மர்மம்
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, அதிமுகவில் சசிகலா தலைமையை ஏற்காமல் போட்டி அதிமுகவை உருவாக்கியுள்ள ஓபிஎஸ் தலைமையிலான அணியினர் கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

லண்டன் டாக்டர் விளக்கம்
இதனையடுத்து, லண்டன் ரிச்சர்ட் தலைமையில், அப்பல்லோ மருத்துவர்கள் செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தனர். அப்போது, ஜெயலலிதாவிற்கு சிகிச்சை அளித்த எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

எய்ம்ஸ் அறிக்கை
இதனையடுத்து, எய்ம்ஸ் மருத்துவர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டது. இதனையேற்று டெல்லி எய்ம்ஸ் துணை இயக்குநர் ஸ்ரீநிவாஸ் தமிழக சுகாதாரச் செயலர் ராதாகிருஷ்ணனிடம் ஜெயலலிதா சிகிச்சை குறித்த 5 அறிக்கைகளை ஒப்படைத்தார்.

சிகிச்சை அறிக்கை வெளியீடு
இதனைத் தொடர்ந்து, இன்று தமிழ்நாடு சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், எய்ம்ஸ் டாக்டர்கள் அளித்த அறிக்கையை டெல்லியில் வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications