காங்கிரஸ் கட்சிக்கு முழுக்கு போடும் ஜெயசுதா? தெலுங்கு தேசத்தில் இணைய முடிவு
ஹைதராபாத்: தெலுங்கு நடிகையும் முன்னாள் எம்.எல்.ஏவுமான ஜெயசுதா, காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் முழுக்குப்போட்டுவிட்டு தெலுங்குதேசம் கட்சியில் அவர் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் படஉலகில் முன்னாள் கதாநாயகனாக இருந்த நடிகர் ஜித்தேந்திராவின் உறவினரான நிதின் கபூர் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார் ஜெயசுதா.

சொல்லத்தான் நினைக்கிறேன், அரங்கேற்றம், மேல்நாட்டு மருமகள், பட்டிக்காட்டு ராஜா, பட்டாக்கத்தி பைரவன், பாண்டியன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஜெயசுதா,57, ஐம்பதுக்கும் அதிகமான தெலுங்குப் படங்களிலும், கன்னடம், மலையாளம் மற்றும் இந்திப் படங்களிலும் நடித்துள்ளார்.
தெலுங்கில் ராமாராவ் உள்ளிட்ட பழம்பெரும் நடிகர்களுடன் ஏராளமான படங்களில் ஜோடியாக நடித்தவர். தெலுங்குத் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கடந்த 2009ம் ஆண்டு ஆந்திர சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் செகந்திராபாத் தொகுதி எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். கடந்த 2014ம் ஆண்டு இதே தொகுதிக்கு நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜெயசுதா, சமீபகாலமாக காங்கிரஸ் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாமல் ஒதுங்கியே இருந்து வருகிறார்.
ஆந்திராவில் காங்கிரஸ் கட்சி படிப்படியாக மறைந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் இணைந்த பிரபல நட்சத்திரங்கள் அதிலிருந்து விலகத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு விரைவில் முழுக்குப்போட்டுவிட்டு தெலுங்குதேசம் கட்சியில் அவர் இணையப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் அக்கட்சியில் ஜெயசுதா சேரப்போவதாக அவரது நலவிரும்பிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications