நாட்டை அநாகரீகத்துக்கு தள்ளும் பசு பாதுகாப்பு கும்பல்: பாஜக கூட்டணி கட்சி ஜேடியூ காட்டம்
டெல்லி: பசுபாதுகாப்பு என்ற பெயரால் கும்பல் வன்முறைகள் தொடருவது என்பது நாகரிகமற்ற நாட்டை நோக்கி நம்மை தள்ளிவிடுகிறது என ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா கடுமையாக சாட்டியுள்ளார்.
பசுக்களை பாதுகாக்கிறோம் என்ற பெயரில் சில கும்பல்கள் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளை அடித்தே படுகொலை செய்கின்ற சம்பவங்கள் தொடர் கதையாகின்றன. இத்தகைய போக்கு அபாயகரமானது என தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனாலும் கும்பல் வன்முறையாளர்களின் அட்டூழியம் அடங்கவில்லை. ஜார்க்கண்ட்டில் சில நாட்களுக்கு முன்னர் கும்பல் வன்முறை தாக்குதலில் ஒருவர் பலியானார். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய செய்தித் தொடர்பாளர் பவன் வர்மா கூறியதாவது:
நாம் ஒரு நாகரிமற்ற ஒரு தேசத்தை சேர்ந்தவர்களாக வாழ்கிறோம் என்பதை உணர்வதற்கு முன்னர் இன்னமும் எத்தனை கும்பல் வன்முறைகள் தேவைப்படுகின்றவாம்?
ஒரு பக்கம், ஹூஸ்டனில் பிரதமர் மோடி, வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் ஜனநாயக கலாசாரம் குறித்து பேசுகிறார். இன்னொரு பக்கம் பசுபாதுகாப்பு என்ற பெயரால் கொடூரமான கும்பல் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன.
இத்தகைய சம்பவங்கள் பெரும் கவலை அளிக்கின்றன. இவ்வாறு பவன் வர்மா கூறினார்.












Click it and Unblock the Notifications