சுரங்க முறைகேடு: ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது- முதல்வர் பதவி ராஜினாமா!
ராஞ்சி: சுரங்க முறைகேடு வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து தமது முதல்வர் பதவியை ஹேமந்த் சோரன் ராஜினாமா செய்தார். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மூத்த தலைவரான சாம்பாய் சோரன் பதவியேற்க உள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. ஹேமந்த் சோரன் மீதான வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் ஹேமந்த் சோரனை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் விசாரணைக்கு ஆஜரானர் ஹேமந்த் சோரன். இதனையடுத்து மீண்டும் விசாரணைக்கு அழைத்தது அமலாக்கத்துறை. ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். அவருக்காக டெல்லி பங்களாவில் 30 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர். அங்கு நடத்தப்பட்ட சோதனையில் ரூ36 லட்சம் ரொக்கப் பணமும் கைப்பற்றது.
இந்நிலையில் டெல்லியில் இருந்து ராஞ்சி திரும்பிய ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜனவரி 31-ந் தேதி அமலாக்கத்துறை விசாரணையின் போது தாம் கைது செய்யப்பட்டால் புதிய முதல்வர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவை முதல்வராக்க விரும்புவதும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கல்பனாவும் பங்கேற்றார்.
இப்பின்னணியில் இன்று ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். அதே நேரத்தில் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
6 மணி நேர விசாரணைக்குப் பின்னர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னதாக தம்மை கைது செய்யும் அமலாக்கத்துறை மெமோவில் கையெழுத்திட ஹேமந்த் சோரன் மறுத்ததாகவும் கூறப்பட்டது.
அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதால் ஹேமந்த் சோரன் தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருக்கு பதில் புதிய முதல்வராக சாம்பாய் சோரன் பதவியேற்கிறார். ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் சாம்பாய் சோரன், புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க கோரும் கடிதத்தை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அம்மாநில ஆளுநரிடம் கொடுத்தனர். இதனால் ஜார்க்கண்ட் மாநில அரசியலில் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications