வெடித்த புது குழப்பம்! ஆலோசனை கூட்டத்தில் 8 MLA-க்கள் மிஸ்ஸிங்! கையை பிசையும் ஜார்க்கண்ட் முதல்வர்
ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இப்போது பெரிய அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சில ஆளும் கட்சி எம்எல்ஏக்கள் மிஸ்ஸிங் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது தான் பீகார் மாநிலத்தில் நிலவிய அரசியல் குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. அங்கு ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணியை முறித்துக் கொண்ட நிதிஷ்குமார் மீண்டும் பாஜக உடன் கை கோர்த்து முதல்வராகப் பதவியேற்றார்.

அங்கு அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்த உடனேயே இப்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் புதிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. சுரங்க முறைகேடு ஊழல் வழக்கில் அம்மாநில முதல்வரே இப்போது சிக்கியுள்ளார்.
சுரங்க ஏலம்: ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருக்கும் போதே ஹேமந்த் சோரன் சுரங்க ஏலத்தைப் பெற்றதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், இதுவே அம்மாநில முதல்வருக்குத் தலைவலியாக மாறியுள்ளது. அமலாக்கத் துறை விசாரணை தீவிரமாக நடந்து வரும் நிலையில், இது குறித்து விசாரிக்க முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத் துறை மொத்தம் 10 முறை சம்மன் அனுப்பியது.
இருப்பினும், ஒரே ஒருமுறை மட்டுமே அவர் விசாரணைக்கு ஆஜராகி இருந்தார். இதையடுத்து மீண்டும் ஜனவரி 29 விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. இதற்கிடையே ஹேமந்த் சோரன் டெல்லி சென்றுள்ளதாகத் தகவல் கிடைத்த நிலையில், அங்கு அவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்த முயன்றது. டெல்லி பங்களாவில் சென்று அமலாக்கத் துறை விசாரிக்க முயன்றது.
மாயம்: இருப்பினும், அங்கே ஹேமந்த் சோரன் இல்லை.. பல மணி நேரம் ஹேமந்த சோரனுக்காக அமலாக்கத் துறை காத்திருந்தது. இருப்பினும், அமலாக்கத்துறையால் அவரை தொடர்பு கொள்ளவே முடியவில்லை என்று கூறப்படுகிறது. மாயமாகி விட்ட ஹேமந்த் சோரனை சுமார் 30 மணி நேரமாக அவர் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை என்றும் தகவல்கள் பரவின. இந்தச் சூழலில் தான் திடீரென ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு ஹேமந்த் சோரன் வந்தார்.
மேலும், அவர் தலைமையில் அவரது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி எம்எல்ஏக்கள் கூட்டமும் நடைபெற்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவரது மனைவி கல்பனாவும் கலந்து கொண்டார். ஒரு வேலை ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டால் அவருக்குப் பதிலாக அவரது மனைவி முதல்வராகப் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாகவே கல்பனாவும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.
எம்எல்ஏ கூட்டம்: இந்தக் கூட்டம் நடந்து முடிந்த பிறகு ஹேமந்த் சோரனை சூழ்ந்து கொண்ட செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இருப்பினும், எதற்கும் நேரடியாகப் பதில் சொல்லாத ஹேமந்த் சோரன் "விரைவில் உங்களிடம் அனைத்தையும் சொல்கிறேன் என்று மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்தார். இதற்கிடையே ஹேமந்த் சோரன் தலைமையில் நடந்த எம்எல்ஏ கூட்டம் தொடர்பாக சில பரபர தகவல் வெளியாகியுள்ளது.
8 எம்எல்ஏக்கள் மிஸ்ஸிங்: அதாவது ஹேமந்த் சோரன் கட்சியில் மொத்தம் 29 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், அவர்களில் 8 பேர் கூட்டத்தில் மிஸ்ஸிங் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை என்று கூறப்படுகிறது. இது ஹேமந்த் சோரன் அரசுக்கே சிக்கலாக மாறும்.
ஏனென்றால், 81 உறுப்பினர்களைக் கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் பெரும்பான்மைக்கு 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. ஆளும் ஹேமந்த் சோரன் கூட்டணி அரசுக்கு 48 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே இருக்கிறது. அவர்களில் 8 பேர் கட்சி மாறினால் ஹேமந்த் சோரன் அரசே கவிழும் சூழல் உருவாகும். மறுபுறம் பாஜக கூட்டணியின் பலம் இப்போது 32ஆக உள்ள நிலையில், அவர்களும் ஆட்சியைப் பிடிக்கத் திரைமறைவில் வேலைகளை ஆரம்பித்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications