வனப் பகுதிக்குள் வைத்து கொரோனா நோயாளிகள் சடலங்கள் எரிப்பு.. ஜார்கண்ட் அரசு விளக்கம்
ராஞ்சி: கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் சடலங்களை வனப்பகுதிக்குள் வைத்து எரித்ததாகவும், அதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் இந்தியா டுடேசேனல் ஒளிபரப்பிய செய்திக்கு ஜார்கண்ட் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தில், ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு போயுள்ளது.
இந்த நிலையில்தான், அல்மோரா என்ற மாவட்டத்தில் வனப்பகுதிக்குள் வைத்து கொரோனாவால் உயிரிழந்த சடலங்கள் எரியூட்டப்பட்டதாக இந்தியா டுடே சமீபத்தில் செய்தி வெளியிட்டிருந்தது. மேலும் அங்கு அதிகாரிகள் யாரும் இல்லை, வழிகாட்டுதல்கள் கிடையாது என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் சுற்றுவட்டார கிராம மக்கள் அச்சத்தில் இருப்பதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜார்கண்ட் மாநில சுகாதாரத்துறை ட்விட்டர் பதிவில் விளக்கமளித்துள்ளது. கொரோனா நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை எரிப்பதற்காக இந்த வனப்பகுதி பயன்படுத்தப்படுகிறது. கவச உடைகள் அணிந்த அரசு ஊழியர்கள் சடலங்களை எரிப்பதில், ஈடுபட்டனர்.
உரிய வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து இந்தியா டுடே ஊடகம் பதிலளித்து வெளியிட்டுள்ள செய்தியில், மே 20ம் தேதி அல்மோரா மாவட்டத்தின் மலைப்பகுதியில் சடலங்கள் எரிக்கப்படுவதாக கிடைத்த தகவல் பெயரில் அங்கு வீடியோ எடுக்கப்பட்டதாகவும், அங்கே வசிக்க கூடிய மக்கள் வைரஸ் பரவல் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
தங்களது பத்திரிக்கையாளர்கள் குழு அந்த இடத்துக்கு சென்றபோது சடலங்கள் எரிக்கப்பட்டு கொண்டு இருந்ததாகவும், அங்கு அரசு சார்பில் அதிகாரிகள் யாரும் இல்லை, மேலாண்மை செய்வதற்கு வழிகாட்டுவதற்கு யாரும் கிடையாது என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.
மேலும் எத்தனை மணியிலிருந்து எத்தனை மணி வரை செய்தியாளர் குழு அங்கு இருந்தது என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, மாலை 4.30 மணிவரை சடலங்களை எரித்து முடிக்கும்வரை அங்கேயே இருந்ததாகவும் அதுவரை எந்த ஒரு அரசு ஊழியரும் வந்து மேற்பார்வை செய்யவில்லை என்றும் அந்த ஊடகம் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
அல்மோரா மாவட்ட கலெக்டர் நித்தின் சிங் மற்றும் எம்எல்ஏ ரேகா ஆரியா ஆகியோரை தொடர்பு கொள்வதற்கு தொலைபேசியில் மற்றும் மெசேஜ் மூலமாக முயற்சி செய்த போதிலும் கூட அவர்கள் அழைப்பை ஏற்கவில்லை என்று இந்தியா டுடே விளக்கமளித்துள்ளது.