ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 ஆசிரியர்கள் கடத்திக் கொலை: ஜார்கண்டில் பயங்கரம்
கும்லா: ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு ஆசிரியர்கள் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்ட ஆசிரியர்களில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் கும்லா மாவட்டத்தில் உள்ள காக்ரா பன்சாரி நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணி புரிந்து வந்தவர் பிரகாஷ் தொப்போ. இவர் கடந்த புதனன்று தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, டோட்டோ கிராமம் அருகே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கடத்தப்பட்டார்.
பின்னர், ஆசிரியர் கடத்தப்பட்டது தொடர்பாக அவரது குடும்பத்தாருக்கு போன் மூலம் தெரிவித்த கடத்தல் கும்பல், அவரை விடுவிக்க குறிப்பிட்ட பிணையத் தொகை கேட்டுள்ளனர். சகோதரரின் உயிருக்கு பங்கம் ஏற்பட்டு விடக் கூடாது என அஞ்சிய அவரது சகோதரி சரோஜ் தொப்போ, இது குறித்து போலீசாருக்கு தெரிவிக்காமல் தானே பிணையத் தொகையுடன் சென்றுள்ளார்.
சகோதரனை மீட்பதற்காக பிணையத் தொகையுடன் சென்ற சரோஜ், திரும்பி வராததால் இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர். சரோஜ் போரி கிராமத்தில் ஆசிரியையாக பணி புரிந்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர்கள் இருவர் கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணையைத் தொடங்கிய நிலையில், காக்ரா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பராங்பட் வனபகுதியில் இருவரது உடல்களும் கண்டெடுக்கப்பட்டன.
இருவரது கைகளும் கட்டப்பட்டு இருந்ததுடன், சரோஜின் வாய் துணியால் கட்டப்பட்டு இருந்துள்ளது. அவர்கள் இருவரும் ஆயுதங்களால் தாக்கி கொலை செய்யப்பட்டு உள்ளனர் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனால் கோபமுற்ற ஆசிரியர்கள் டவர் சவுக் பகுதி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆசிரியர்களைக் கடத்திக் கொலை செய்த குற்றவாளிகள் யார் எனப் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன் விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.