திருமணமான 30நாளில் கணவனுக்கு உணவில் விஷம்வைத்த பெண்.. ஹனிமூன் கொலைக்கும் இதற்கும் இப்படி ஒரு தொடர்பா
ராஞ்சி: மேகாலயா ஹனிமூன் கொலையை போல ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றது. திருமணமான ஒரு மாதத்திலேயே உணவில் விஷம் கலந்து கொடுத்து கணவனை கொலை செய்த குற்றத்துக்காக மனைவி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்துக்கும், ஹனிமூன் கொலைக்கும் மற்றொரு பொருத்தமும் உள்ளது.
மத்தியப்பிரதேச மாநில புதுமண தம்பதி கடந்த மாதம் மேகாலயா ஹனிமூன் சென்றனர். அங்கு வைத்து கணவன் ராஜா ரகுவன்ஷியை, மனைவி சோனம் காதலன் மற்றும் கூலிப்படையினருடன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சோனம், அவரின் காதலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

அந்த சம்பவத்தின் அதிர்ச்சியை அடங்காத நிலையில், அதே பாணியில் மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம், பஹோகுந்தர் பகுதியைச் சேர்ந்தவர் புத்நாத் சிங். இவருக்கு சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண்ணுடன் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. இரண்டு குடும்பங்கள் பேசி நடத்திய திருமணத்திலும் பல்வேறு பிரச்னைகள் எழுந்துள்ளன.
திருமணமான அடுத்த நாளே சுனிதா கோபித்துக் கொண்டு புத்நாத் சிங் வீட்டில் இருந்து வெளியேறி, தன் பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். தனக்கு இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லை. எனக்கு புத்நாத் சிங்கை பிடிக்கவில்லை. அவருடன் இணைந்து வாழ மாட்டேன் என்று சுனிதா பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனால் இரண்டு வீட்டாரும் அவரை சமாதானப்படுத்தி மீண்டும் திருமண வாழ்க்கையில் இணைத்து விட முயற்சி செய்துள்ளனர். இரண்டு குடும்பத்தினரும் கடந்த ஜூன் 5 ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதில் உடன்பாடு ஏற்பட்டு சுனிதாவும் புத்நாத் சிங்குடன் இணைந்து வாழ சம்மதம் தெரிவித்து அவருடன் புகுந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.
இந்த புதுமண தம்பதி கடந்த ஜூன் 14 ஆம் தேதி சத்தீஸ்கர் சென்றுள்ளனர். அன்றைய தினம் ராமானுஜ்கஞ் சந்தைக்கு சென்றுள்ளனர். அப்போது சுனிதா தன் கணவன் புத்நாத் சிங்கிடம், விவசாய பணிகளுக்காக பூச்சி மருந்து தேவைப்படுகிறது. வாங்கிக் கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதை நம்பி புத்நாத்தும் சுனிதாவுக்கு பூச்சி மருந்து வாங்கிக் கொடுத்துள்ளார்.
அடுத்த நாள் ஜார்கண்ட் திரும்பிய நிலையில்.. அதாவது ஜூன் 15 ஆம் தேதி இரவு சுனிதா, புத்நாத் சிங்குக்கு உணவில் பூச்சி மருந்து கலந்து கொடுத்துள்ளார். விவரம் அறியாத புத்நாத் சிங் அந்த உணவையும் சாப்பிட்டு தூங்கியுள்ளார். காலை நீண்ட நேரமாகியும் அவர் எழுந்திருக்கவில்லை.
அதிர்ச்சியடைந்த அவரின் அம்மா ராஜ்மதி தேவி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் புத்நாத் சிங்கை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த செய்த மருத்துவர், புத்நாத் சிங் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இதுதொடர்பாக ராஜ்மதி தேவி ரன்கா காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரதே பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில், "புத்நாத் சிங் அம்மாவின் புகாரில் வழக்குப்பதிவு செய்து சுனிதாவை கைது செய்துள்ளோம். புத்நாத் உடலுக்கு பிரேத பரிசோதனை செய்துள்ளோம். சுனிதாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்." என்றனர்.
இந்த கொலை சம்பவத்துக்கும், மேகாலயா ஹனிமூன் ராஜா ரகுவன்ஷி கொலைக்கும் ஒரு பொருத்தம் உள்ளது. ராஜா ரகுவன்ஷி - சோனமுக்கு மே 11 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. அதே மே 11 நாளில் தான் புத்நாத் சிங் - சுனிதா தம்பதிக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இரண்டு திருமணத்திலும் கணவர்கள், மனைவியால் கொலை செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications