ஹரியானா பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸுடன் கை கோர்க்க ரெடி- துஷ்யந்த் சிங் சவுதாலா திடீர் அறிவிப்பு!
சண்டிகர்: ஹரியனாவில் பெரும்பான்மையை இழந்த பாஜக ஆட்சியை கவிழ்க்க காங்கிரஸுடன் இணைந்து செயல்பட தயார் என 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜேஜேபி தலைவர் துஷ்யந்த் சவுதாலா அறிவித்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹரியானா சட்டசபைக்கு 2019-ல் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் எந்த ஒரு கட்சிக்குமே பெரும்பான்மை கிடைக்கவில்லை. 90 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஹரியானா சட்டசபையில் பெரும்பான்மைக்கு தேவை 46 எம்.எல்.ஏக்கள். அத்தேர்தலில் பாஜக 40; காங்கிரஸ் 31; ஜேஜேபி 10-ல் வென்றன. 7 இடங்களில் சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.

இந்த நிலையில் ஜேஜேபி கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள், சுயேட்சைகள் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட ஜேஜேபி கட்சி, பாஜக அரசுக்கான ஆதரவை வாபஸ் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது சுயேட்சைகளில் 3 பேர், பாஜக அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு காங்கிரஸை ஆதரிக்கின்றனர்.
தற்போது ஹரியானா சட்டசபையில் மொத்தம் 88 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 40 + ஆதரவு சுயேட்சைகள் 2 + ஹெச்எல் பி கட்சி 1 என மொத்தம் 43 எம்.எல்.ஏக்கள் ஆதரவு உள்ளது. பெரும்பான்மைக்கு தேவை 45 எம்.எல்.ஏக்கள். 2 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாமல் பெரும்பான்மையை இழந்து நிற்கிறது பாஜக அரசு.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 30+3 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருக்கிறது. மேலும் தற்போது 10 எம்.எல்.ஏக்களைக் கொண்ட துஷ்யந்த் சவுதாலாவின் ஜேஜேபி கட்சியும் காங்கிரஸை ஆதரிக்க தயாராக இருப்ப்தாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக துஷ்யந்த் சவுதாலா கூறுகையில், ஹரியானாவில் ஆளும் பாஜக அரசை அகற்றுவதற்கு காங்கிரஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டால் ஜேஜேபி கட்சி எம்.எல்.ஏக்கள் ஆதரவு தருவர் என தெரிவித்துள்ளார். இதனால் காங்கிரஸ்+ ஜேஜேபி இணைந்து ஆளும் ஹரியானா பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் காங்கிரஸ், ஜேஜேபி கட்சிகளை உடைத்து ஆட்சியை பாதுகாக்கவும் பாஜக தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications