ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து 5 தலைவர்கள் படுகொலை- உயிர் அச்சத்தில் பாஜக பிரமுகர்கள்
ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அடுத்தடுத்து 5 பாஜக தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதனால் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச பாஜக பிரமுகர்கள் பெரும் அச்சத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370வது பிரிவை மத்திய அரசு கடந்த ஆண்டு நீக்கியது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்கள் கணிசமாக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகர்கள் பெரும் உயிர் அச்சத்தில் இருக்கின்றனர். கடந்த சில வாரங்களில் மட்டும் பாஜகவை சேர்ந்த 6 தலைவர்கள், பயங்கரவாதிகளால் இலக்கு வைத்து தாக்கப்பட்டனர். இதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால் பாஜக பிரமுகர்களுக்கு என தனி பாதுகாப்பு வலயம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். பாஜகவின் மாவட்ட தலைமை அலுவலகங்களில் 50 முதல் 60 பேர் உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்பாடு செய்து பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இத்தகைய வன்முறை சம்பவங்களுக்கு ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் கண்டனமும் தெரிவித்து வருகின்றன.












Click it and Unblock the Notifications