ஜேஎன்யூ மாணவர் முத்துகிருஷ்ணன் மரணம் தற்கொலையே… பிரேத பரிசோதனை அறிக்கை
ஜேஎன்யூ மாணவர் முத்துகிருண்ணன் உடல் பிரேத பரிசோதனையின் முடிவில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி: டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த தமிழக மாணவர் முத்துகிருஷ்ணன் அவரது நண்பர்கள் அறையில் தற்கொலை செய்து கொண்டதாக 13ம் தேதி தெரிவிக்கப்பட்டது.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றில் எம்.ஃபில் ஆராய்ச்சி படிப்பு பயின்று வந்தார் சேலத்தைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன்.
கடந்த 13ம் தேதி முத்துக்கிருஷ்ணன், நண்பர்கள் அறையில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அங்கிருந்து பிணமாக மீட்கப்பட்டார். அங்கிருந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
பேஸ்புக் பதிவு
இதனிடையே எம்ஃபில் மற்றும் முனைவர் பட்ட படிப்புகளுக்கான சேர்க்கையில் ஜேஎன்யூவில் பாரபட்சம் காட்டப்படுவதாக முத்துகிருஷ்ணன் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போராளி
ரோகித் வெமுலா தற்கொலைக்கு நீதி கிடைக்க போராடி வரும் மாணவர் குழுவில் இணைந்து பல்வேறு போராட்டங்களை முத்துகிருஷ்ணன் முன்னெடுத்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மாணவர்களாலும் பெற்றோர்களாலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
போலீசார் விசாரணை
முத்துகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று போலீசார் ஆணித்தரமாக தெரிவித்தனர்.
மறுத்த தந்தை
இதனை கடுமையாக எதிர்த்த முத்துக்கிருஷ்ணனின் தந்தை ஜீவானந்தம், "எனது மகன் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்வதற்கு வாய்ப்பே இல்லை"என்று உறுதிப்பட கூறினார். மேலும், தனது மகன் உடல் போஸ்மார்ட்டம் செய்யப்படும்போது டாக்டர்கள் குழு ஒன்று அங்கிருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசு தலையீடு
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு, மரணமடைந்த முத்துக்கிருஷ்ணன் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவித்தார். பின்னர் அவரது உடலை சேலத்திற்கு கொண்டு வருவதற்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொள்வதாக தமிழக அரசு அறிவித்தது.
தற்கொலையே..
இந்நிலையில் முத்துக்கிருஷ்ணனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேத பரிசோதனை அறிக்கை முத்துக்கிருஷ்ணனின் பெற்றோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.