"தூக்குக் கயிறாக மாறிய நூடுல்ஸ்"... மேகி தடையால் வேலையிழந்த நெஸ்லே ஊழியர் தற்கொலை
ருத்ராபூர்: மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து வேலை இழந்த நெஸ்லே இந்தியா ஒப்பந்த ஊழியர் உத்தரகண்ட் மாநிலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நெஸ்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக ஈயம், மோனோசோடியம் க்ளூட்டமேட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பிறகு அதற்கு உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்தது. இதையடுத்து நெஸ்லே நிறுவனம் மேகி நூடுல்ஸ் தயாரிப்பை நிறுத்திவிட்டு சந்தையில் உள்ள நூடுல்ஸ் பாக்கெட்டுகளை திரும்பப் பெற்று அழித்து வருகிறது.

மேகி பிரச்சனையால் நெஸ்லே இந்தியா நிறுவன ஊழியர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். இந்நிலையில் உத்தரகண்ட் மாநிலம் ருத்ராபூரில் உள்ள நெஸ்லே இந்தியா நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்த உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியைச் சேர்ந்த லால்தா பிரசாத்(32) வேலை இழந்துவிட்டார்.
வேலை இழந்த சோகத்தில் இருந்த அவர் நேற்று தான் தங்கியிருந்த வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
ருத்ராபூரில் உள்ள ஆய்வகம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையில் மேகி நூடுல்ஸில் உடல் நலத்திற்கு கேடுவிளைவிக்கும் பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உத்தரகண்டில் 90 நாட்களுக்கு மேகி நூடுல்ஸுக்கு தடை விதித்து உத்தரகண்ட் மாநில உயர் நீதிமன்றம் கடந்த 3ம் தேதி உத்தரவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications