"காவி கொடி".. ஜோத்பூரில் முட்டிக் கொண்ட 2 சமூகத்தினர்.. இன்று இரவு வரை ஊரடங்கு.. 97 பேர் அதிரடி கைது
ஜோத்பூரில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 97 பேர் கைதாகி உள்ளனர்
ஜோத்பூர்: இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இதுவரை 97 பேரை கைது செய்துள்ளதாகவும், தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் ராஜஸ்தானின் ஜோத்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
ராஜஸ்தானின் ஜோத்பூரில் நேற்று முன்தினம் இரவு அதாவது, ரம்ஜான் கொண்டாட்டம் தொடங்குவதற்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது...
இதில், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறையில் 5 போலீசார் உட்பட ஏராளமானோர் காயமடைந்தனர்.

ரம்ஜான்
எனினும், நேற்றைய தினம் ரம்ஜான் என்பதால், இந்த பதற்றம் ஓரளவு தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. ஆனால், காலையிலேயே தொழுகைக்கு பிறகும் சிலர் கல்வீச்சில் ஈடுபட்டதால் மறுபடியும் அங்கு பதற்றம் ஏற்பட்டது... காரணம், ஜோத்பூரின் ஜலோரி கேட் சந்திப்பில் சுதந்திரப் போராட்ட வீரர் பால்முகுந்த் பிஸ்ஸாவின் சிலை உள்ளது... இந்த சிலைக்கு பக்கத்திலேயே ரம்ஜானை முன்னிட்டு சிறுபான்மை சமூகத்தினர் நேற்று முன்தினம் இரவு தங்கள் மதக் கொடியை கட்டியுள்ளனர்.

காவிக்கொடி
அப்போது, பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு அங்கு ஏற்கெனவே கட்டப்பட்டிருந்த காவிக் கொடி அகற்றப்பட்டதாக சிலர் ஆட்சேபம் தெரிவித்ததில் இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது... இதுதான் இரு சமூகத்தினர் இடையிலான மோதலாக வெடித்தது..கொடிகள், பேனர்களை கிழித்த கும்பல், ஒலிபெருக்கிகளையும் அகற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால், இரு தரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்டனர்..

வன்முறையாளர்கள்
4 போலீசார் உட்பட 16 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து, போலீசார் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர்.. போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் வன்முறையாளர்களை விரட்டினர். இதனிடையே, மாநில முதல்வர் அசோக் கெலாட், உள்துறை அமைச்சர், உள்துறை செயலாளர் , ஏடிஜிபி உள்ளிட்டோரை சம்பந்தப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதற்கு உத்தரவிட்டிருந்த நிலையில், மாநில மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை கடைப்பிடிக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.

ஊரடங்கு அமல்
மேலும், இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக உயர்மட்ட குழு கூட்டத்தைக் கூட்டிய முதல்வர் அசோக் கெலாட் தேவையான நடவடிக்கைகளை எடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பச் செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து இதனை தொடர்ந்து 10 காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. குறிப்பாக, உதய் மந்தீர், நகோரி கேட், கந்தா பால்சா, பிரதாப் நகர், தேவ் நபர், சூர் சாகர், சர்தார்புரா உள்ளிட்ட காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று 4-ம் தேதி நள்ளிரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது..

97 பேர் கைது
வன்முறை சம்பவம் உச்சத்தை எட்டிய நிலையில், ஜோத்பூர் பகுதி முழுவதும் தடுப்புகள் அமைத்து காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது... மேலும், வன்முறை மேலும் பரவாமல் கட்டுப்படுத்த, ஜோத்பூர் மாவட்டம் முழுவதும் இணையதள சேவையும் முடக்கப்பட்டது.. ஆயிரக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.. மேலும் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக இதுவரை 97 பேர் கைதாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications