சக நீதிபதியுடன் வாக்குவாதம்...மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நீதிபதி கர்ணன் !
கொல்கத்தா: சக நீதிபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நீதிபதி சி.எஸ்.கர்ணன் மீது கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மஞ்சுளா செல்லூர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அடிபடுபவர். நீதித்துறை பணியிடங்கள் விவகாரத்தில் இவர் பிறப்பித்த தடை உத்தரவால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து நீதிபதி கர்ணனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் முறையிட்டார்.

இதன் பின்னர் நீதிபதி கர்ணனனை கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தாக்கூர் இடம் மாற்றம் செய்தார். இதற்கும் அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து தன்னை கொல்கத்தா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்ததால் சர்ச்சைக்குள்ளான நீதிபதி சி.எஸ்.கர்ணன் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
தற்போது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருக்கும் அவர் ஜாமீன் வழக்கு ஒன்றில் தீர்ப்பு வழங்குவது தொடர்பாக விசாரணை அமர்வின் சக நீதிபதி அசிம் குமார் ராயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
திறந்த நீதிமன்றத்தில் நடந்த இந்த வாக்குவாதத்தால் நீதிபதி கர்ணன் இனி தனி நீதிபதி அமர்வின் முன் வரும் வழக்குகளை மட்டுமே விசாரிப்பார் என கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் கல்வி சம்பந்தப்பட்ட வழக்குகளையும், நிலுவையில் உள்ள பழைய வழக்குகளை மட்டுமே விசாரிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்கு காரணம்:
விவேகனந்தா மேம்பாலம் இடிந்து விழுந்த வழக்கு தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 10 பேர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த ஜாமீன் மனு கடந்த மாதம் 20-ம் தேதி நீதிபதிகள் சி.எஸ்.கர்ணன், அசிம் குமார் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்துள்ளது. மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாமீன் வழங்க மறுப்பதாக உத்தரவிட்டனர்.
திறந்த நீதிமன்றத்தில் அனைவரது முன்னிலையில் ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக கூறிவிட்டு தனது அறைக்குச் சென்ற நீதிபதி கர்ணன் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேருக்கும் ஜாமீன் வழங்குவதாக கூறி கோப்பில் கையெழுத்திட்டார். இது தான் அவர் சர்ச்சையில் சிக்குவதற்கு காரணமானது.
கர்ணனுக்கு எதிர்ப்பு:
இதற்கிடையில் கொல்கத்தா உயர் நீதிமன்ற பார் அசோஷியேசன் நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், இனி நீதிபதி கர்ணனின் வழக்கு விசாரணைகளில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளது. இத்தகவலை பார் அசோஷியேசன் பொதுச் செயலர் சுரஞ்சன் தாஸ்குப்தா உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, நான் தாழ்த்தப்பட்டவன் என்பதால்தான் எனக்கு எந்த ஒரு வழக்கையும் ஒதுக்கீடு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாதி வெறியுள்ள இந்த நாட்டை விட்டு தாம் வெளியேறப் போவதாக நீதிபதி கர்ணன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்ததது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications