ஜெயலலிதா அப்பீல் மனு மீது இம்மாதம் 30ம் தேதிக்குள் ஹைகோர்ட் தீர்ப்பு வழங்க வாய்ப்பு!
பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான தீர்ப்பை கர்நாடக ஹைகோர்ட் சிறப்பு நீதிபதி குமாரசாமி இம்மாதம் 30ம் தேதிக்குள்ளேயே வழங்க வாய்ப்புள்ளது. ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணை முடிந்துவிட்ட நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தார் ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி.
இந்நிலையில் அரசு வக்கீல் பவானிசிங் ஆஜரானதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், இரு நீதிபதிகள் பெஞ்ச் முரண்பட்ட தீர்ப்பு வழங்கியதால், தீர்ப்பு வழங்க கால அவகாசம் தருமாறு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவிடம் குமாரசாமி கேட்டுக்கொண்டார்.

தத்து ஒப்புதல்
இதற்கு தத்துவும் அனுமதி வழங்கினார். இதையடுத்து பவானிசிங் ஆஜருக்கு எதிரான வழக்கு மூன்று நபர் பெஞ்சுக்கு சென்றபோது, தீர்ப்பு வழங்கும் காலக்கெடுவை மே 12வரை நீடித்தார் தத்து. மூன்று நபர் பெஞ்ச் தீர்ப்பை மே 12வரை விசாரணை நடத்தும் என்று நினைத்து, தத்து இவ்வாறு காலநீட்டிப்பு செய்தார்.

தீர்ப்புக்கு இடைக்கால தடை
அதுவரை தீர்ப்பை வெளியிட தடை விதித்தார். மேலும் தேவையென்றாலும் காலநீட்டிப்பு வழங்க தயார் என்றும் அறிவித்தார். ஆனால், மூன்று நபர் பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கிவிட்டது. கர்நாடக அரசு, அன்பழகன் தரப்பு நாளைக்குள், எழுத்துப்பூர்வ ஆவணங்களை தாக்கல் செய்யலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அன்பழகன் மனு தாக்கல்
இதையேற்று அன்பழகன் தரப்பு இன்றே எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்துவிட்டது. கர்நாடக தரப்பும் நாளைக்குள் குமாரசாமியிடம் மனுவை தாக்கல் செய்துவிடும்.

இம்மாதம் தீர்ப்பு?
அல்லது கர்நாடகம் மனு தாக்கல் செய்யாமலும் இருக்கும். இருப்பினும் அன்பழகன் மனுவை அதை பரிசீலித்து, குமாரசாமி ஏற்கனவே கேட்ட காலக்கெடுவான ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன்பாக தீர்ப்பு வழங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அன்பழகன் மற்றும் கர்நாடக தரப்பு பதிலை படித்து பார்க்க ஒருவேளை கால அவகாசம் தேவைப்பட்டால், மே முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாகும். ஆனால் இம்மாதமே தீர்ப்பு வெளியாகவே வாய்ப்புள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications