அப்பாவுக்கு விதித்த தண்டனையை ரத்து செய்க - பிரணாபிடம் கர்ணன் மகன் மனு
டெல்லி: தன் தந்தைக்கு சுப்ரீம் கோர்ட் விதித்துள்ள தண்டனையை ரத்து செய்யக் கோரி நீதிபதி கர்ணனின் மகன் சுகன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேசமயம், தனது தந்தை சரணடைய மாட்டார் என்றும் பின்னர் செய்தியாளர்களிடம் சுகன் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வந்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகளுக்கு சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பளித்தார். இதனால், ஆத்திரமடைந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு கர்ணனுக்கு 6 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர். ஆனால் கர்ணன் எங்கிருக்கிறார் என்பத தெரியவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். அவரைத் தேடிப் பார்த்த போலீஸார் பின்னர் போய் விட்டனர்.
இந்த நிலையில் தன் மீதான சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி கர்ணன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதை அவசர வழக்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் கர்ணன் சார்பில் தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து விட்டது.
இதனால் கர்ணன் கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் இன்று நீதிபதி கர்ணனின் மகன் சுகன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்துள்ளார்.
தனது தந்தைக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்யக் கோரி மனு கொடுத்ததாகவும், தனது தந்தை சரணடைய மாட்டார் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.