டெல்டா விவசாயிகளுக்கோர் நல்ல சேதி.. நிரம்பியது கபினி அணி.. வினாடிக்கு 11,000 கன அடிநீர் திறப்பு!
தொடர் மழையால் கர்நாடக மாநிலம் கபினி அணை நிரம்பியுள்ளதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மைசூரு: தொடர் மழையால் கர்நாடக மாநிலம் கபினி அணை நிரம்பியுள்ளது. இதானல் வினாடிக்கு 11000 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது.
மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளி பகுதியில் கபினி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் நீர்பிடிப்பு பகுதியான கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால் கபினி அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்ததால், கபினி அணை தனது முழு கொள்ளளவையும் எட்டி உள்ளது.

நிரம்பியது கபினி அணை
2284.80 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் தற்போது 2282.50 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

11,000 கனஅடி திறப்பு
அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. கடந்த ஆண்டு பருவமழை முறையாக பெய்யாததால் கபினி அணை நிரம்பவில்லை.

விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால் பாசனத்துக்கு தண்ணீர் இன்றி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். ஆனால் இந்த ஆண்டு கனமழை பெய்ததால், கபினி அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாளை கபினியில் சிறப்பு பூஜை
அணை நிரம்பி உள்ளதால், பாரம்பரிய முறைப்படி கபினி அணைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட உள்ளது. நாளை தசரா திருவிழாவை தொடங்கி வைக்கும் முதல்வர் சித்தராமையா பின்னர் கபினி அணையில் சிறப்பு பூஜை செய்கிறார்.

வெள்ள எச்சரிக்கை - மகிழ்ச்சி
கபினி அணையில் இருந்து உபரிநீர் திறந்துவிடப்படலாம் என்பதால் கபினி கரையோரத்தில் இருக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications