அண்ணனை போன்று நடிகர் கலாபவன் மணியும் தற்கொலை செய்து கொண்டாரா?
திருச்சூர்: நடிகர் கலாபவன் மணி தற்கொலை செய்து கொண்டிருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. முன்னதாக அவரது அண்ணன் வேலாயுதன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆட்டோ டிரைவராக இருந்து மலையாள திரையுலகில் நுழைந்தவர் கலாபவன் மணி. கல்லீரல் பிரச்சனையால் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிர் இழந்தார்.
அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தது மலையாள திரையுலகினர் பெரும்பாலானோருக்கு தெரியாதாம்.
புகார்
கலாபவன் மணியின் மரணம் இயற்கை அல்ல என்று அவரது சகோதரர் ராமகிருஷ்ணன் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அவர்களின் சொந்த ஊரான சாலக்குடியில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மணி தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அண்ணன்
கலாபவன் மணியின் அண்ணன் வேலாயுதன்(51) சாலக்குடியில் உள்ள அவரது வீட்டில் எரிந்த நிலையில் கடந்த 2009ம் ஆண்டு பிணமாகக் கண்டுபிடிக்கப்பட்டார். அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மணி
குடிப்பழக்கம் உள்ள கலாபவன் மணி அண்மையில் உடல் எடை வெகுவாக குறைந்து மெலிந்து காணப்பட்டுள்ளார். மேலும் படப்பிடிப்புக்கு வரும்போது எல்லாம் மிகவும் சோர்வாக இருந்துள்ளார்.
சிரிப்பு
என்ன மணி திடீர் என்று இப்படி ஒல்லியாகிவிட்டீர்கள். எப்பொழுது பார்த்தாலும் சோர்ந்து காணப்படுகிறீர்கள் என்று சக நடிகர்கள் கேட்டதற்கு நான் டயட்டில் உள்ளேன் அதான் ஒல்லியாகிவிட்டேன். நான் சோர்வாக எல்லாம் இல்லையே என்று கூறி சிரித்துள்ளார்.
அதிர்ச்சி
கலாபவன் மணியின் மரண செய்தி அறிந்து மலையாள திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை என்று நடிகர், நடிகைகள் தெரிவித்துள்ளனர்.