ராமேஸ்வரத்தில் கலாமுக்கு நினைவு மண்டபம்: பிரதமர் மோடி அறிவிப்பு
டெல்லி: ராமேஸ்வரத்தில் அப்துல் கலாமுக்கு நினைவு மண்டபம் அமைக்க மத்திய அரசு நிலம் தேர்வு செய்திருப்பதாகவும், அந்த நினைவு மண்டபம் எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிப்பதாக இருக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் 84வது பிறந்தநாளையொட்டி நேற்று டெல்லியில் டி.ஆர்.டி.ஓ (பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக் கழகம்) அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் சிலையை பிரதமர் மோடி திறந்துவைத்தார்.

பின்னர் மோடி கூறியது: குடியரசுத் தலைவராகுவதற்கு முன்னரே, அப்துல் கலாம் நம் தேசத்தின் விலை மதிப்பில்லாத ரத்தினமாக திகழ்ந்தவர். அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. குடியரசுத் தலைவர் பதவிக்காலம் முடிந்ததுமே கலாம் ஆசிரியர் பணியாற்ற விரும்பினார்.
ஆசிரியர் தொழில் மீது இயல்பான ஈடுபாடு இல்லாத யாராலும் மிகப் பெரிய பதவிக் காலத்துக்குப் பின்னர் அந்த வேலையைச் செய்ய முடியாது. அவரது ஈடுபாடு காரணமாகவே அவரது வாழ்நாளின் கடைசி நிமிடங்கள் மாணவர்களுடன் செலவிடும்படி அமைந்தது.
அப்துல் கலாம் கொள்கைகளால் இன்றைய இளம் விஞ்ஞானிகள் ஈர்க்கப்பட வேண்டும். கலாமின் கனவுகளைக் கொண்டு இந்திய தேசத்தை நாம் உருமாற்றுவோம். அப்துல் கலாம் சொந்த ஊரில் அவருக்கு நினைவு மண்டபம் அமைக்க மத்திய அரசு நிலம் தேர்வு செய்துள்ளது. அந்த நினைவிடம் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் அமையும். இவ்வாறு மோடி தெரிவித்தார். சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு முன் அப்துல் கலாம் வாழ்க்கை குறிப்பை விளக்கும் விதமாக அமைக்கப்பெற்ற புகைப்பட கண்காட்சியை மோடி பார்வையிட்டார்.












Click it and Unblock the Notifications