ஆதரவு கரம் நீட்டிய சமாஜ்வாதி.. மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரியது காங்கிரஸ்!
Recommended Video
போபால்: மத்திய பிரதேசத்தில் இரவோடு இரவாக ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோர முயற்சி செய்தது. ஆனால் ஆளுநர் காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்த நிலையில் இன்று மதியம், காங்கிரஸ் தலைவர்களை சந்தித்தார் ஆளுநர் ஆனந்திபென் பட்டேல்.
மத்திய பிரதேசத்தில், வாக்கு எண்ணிக்கையில், நேற்று காலை முதலே, காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வந்தது. இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்தனர்.
நள்ளிரவிலும் கூட இறுதியான முடிவை தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. இன்று காலையில் கூட ஒரு தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை என்பது நடைபெற்றது. காலை 8.30 மணியளவில்தான் வாக்கு எண்ணிக்கை முடிவு வெளியானது. காங்கிரஸ் 114 தொகுதிகளை வென்றது. பாஜக 109 தொகுதிகளை வென்றுள்ளது. பெரும்பான்மையை நிரூபிக்க தேவை 116 தொகுதிகளாகும்.
அதிகாலை பேட்டி
இதனிடையே இன்று அதிகாலை 2.30 மணிக்கு மத்திய பிரதேச காங்கிரசின் மூத்த தலைவர்கள் கமல்நாத், ஜோதிராதிய சிந்தியா மற்றும் திக்விஜய் சிங் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
பெரும்பான்மை
அப்போது அவர்கள் ம.பி.யில் ஆட்சியை அமைப்பதற்கு காங்கிரசை அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்தனர். நாங்கள் அறுதிப்பெரும்பான்மை பெற்று விட்டோம் என்றும் கமல்நாத் அப்போது தெரிவித்தார்.
ஆட்சியமைக்க அழையுங்கள்
ஆனால் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்த நேரத்தில் காங்கிரஸ் கட்சி 111 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. குறைந்தது, 116 தொகுதிகளை வெல்லும் கட்சிதான் அறுதிப் பெரும்பான்மை பெற்றதாக அறிவிக்கப்படும். ஆனால், இழுபறி நீடித்து கொண்டிருந்த நிலையிலேயே, அறுதிப் பெரும்பான்மை வெற்றி பெற்றதாக கூறி ஆட்சி அமைக்க அனுமதி கோரியது காங்கிரஸ்.
ஆளுநர்
நள்ளிரவிலேயே ஆளுநர் ஆனந்திபென் பட்டேலை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க கேட்டு காங்கிரஸ் சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. ஆனால் இவர்களை சந்திப்பதற்கு ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை. தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை பொறுமையாக இருக்கும்படி ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 11 மணியளவில் ஆளுநர் மாளிகையிலிருந்து காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க இன்று மதியம் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 12 மணியளவில் ஆளுநர் ஆனந்திபென் பட்டேலை சந்தித்து, ஆட்சியமைக்க காங்கிரஸ் உரிமை கோரியது. கமல்நாத், திக்விஜய் சிங், ஜோதிராத்யா சிந்தியா ஆகியோர் காங்கிரஸ் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.