40 லட்சம் போலி வாக்காளர்கள்... தலைமை தேர்தல் ஆணையரிடம் கனிமொழி புகார்
டெல்லி: தமிழகத்தில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் திமுக எம்பி கனிமொழி புகார் மனு அளித்துள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி உள்ளதாகவும் பல லட்சம் போலிவாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் திமுக தலைவர் கருணாநிதி விரிவான அறிக்கை ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியை இன்று திமுக எம்பி கனிமொழி நேரில் சந்தித்து மனு ஒன்றை கொடுத்தார். அதில் வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் ஆளும் கட்சியினர் தலையீடு இருந்தது. 22% வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழக வாக்காளர் பட்டியலில் 40 லட்சம் போலி வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். திமுகவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கிவிடுகின்றனர்.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதியிடம் விவரித்துள்ளேன். அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.
இவ்வாறு கனிமொழி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications