கலைஞர் டிவி பண பரிமாற்றத்தில் துளியளவும் தொடர்பில்லை: கோர்ட்டில் கனிமொழி வாதம்!
டெல்லி: கலைஞர் டிவியின் புரமோட்டர் இயக்குநராக 13 நாட்கள் பதவி வகித்தது மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் அலுவலகத்துக்கு வழக்கமாக சென்று வந்ததாலேயே கலைஞர் டிவி வழக்கில் கனிமொழி மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக டெல்லி நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு குறித்த வழக்கு டில்லி, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. இதில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை பெறுவதற்காக, கலைஞர் டிவிக்கு 200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக மத்திய அமலாக்க துறை சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதில் தி.மு.க. எம்.பி., கனிமொழி உள்ளிட்டோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வழக்கில் ஜாமீன் கோரி கனிமொழி சார்பில் மனு தாக்கல் செய்யப் ட்டது.
இம்மனு நீதிபதி ஓ.பி.சைனி முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரெபக்கா ஜான், கலைஞர் டிவிக்கு பணப் பரிமாற்றம் நடந்ததாக கூறப்படும் வழக்கில் என் கட்சிகாரருக்கு துளியளவு கூட தொடர்பு இல்லை.
குற்றச்சாட்டுகள் போலியாக புனையப்பட்டுள்ன. என் கட்சிக்காரருக்கு எதிராக இது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை. கலைஞர் டிவியின் புரமோட்டர் டைரக்டராக 13 நாட்கள் பதவி வகித்ததையும், முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவின் அலுவலகத்துக்கு சென்றதையும் காரணம் காட்டி கனிமொழி மீது இக் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன என்றார்.