ஆடு என்று நினைத்து நாயைத் துரத்திக் கொண்டு ஓடி.. பக்ரீத் நாளன்று ஏமாந்த வாலிபர்!
லக்னோ: ஆடு என நினைத்து நாயை துரத்தி சென்று பக்ரீத் நாளன்று இளைஞர் ஒருவர் ஏமாந்தார்.
கான்பூரை சேர்ந்தவர் அஷ்ரப். இவர் பக்ரீத் என்னும் ஈகைத் திருநாளையொட்டி தன்னிடம் இருந்த 3 ஆடுகளை திங்கள்கிழமை இரவு விற்பதற்காக ஜஜ்மா சுங்கி எனப்படும் ஆடு விற்பனை மார்க்கெட்டுக்கு சென்றார்.
அப்போது அவர் தன்னிடம் இருந்த இரண்டு ஆடுகளை எப்படியோ விற்றுவிட்டார். மூன்றாவது ஆட்டை விற்க யாரேனும் வரமாட்டார்களா என எதிர்பார்த்து காத்திருந்தார்.
ஆட்டை துரத்தி கொண்டு
அப்போது அங்கு வந்த ஒரு நபர் உங்களது ஆடு ஒன்று தப்பி ஓடிவந்து என் பின்னால் நின்று கொண்டிருக்கிறது என்று அஷ்ரப்பிடம் கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அஷ்ரப் அவர் தனது ஆட்டை கட்டி வைத்திருந்த இடத்தை பார்க்காமல் அந்த நபர் சொன்ன ஆட்டை துரத்தி கொண்டு ஓடினார்.
குரைத்தது
அந்த ஆட்டின் கழுத்தில் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு கழுத்தில் கட்டியிருந்த கயிறு அஷ்ரப் தனது ஆட்டுக்கு கட்டியதை போல் இருந்தது. இதனால் அந்த ஆட்டை பிடிக்க சென்றபோது அது குரைத்தது. இதனால் திடுக்கிட்ட அஷ்ரப் தனது இடத்துக்கு வந்து பார்த்தார்.
ஆட்டைய போட்டார்
அப்போது இவர் கட்டி வைத்திருந்த இடத்தில் ஆடு இல்லை. இருட்டை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்த மர்ம நபர் நாயை ஆடு என அஷ்ரப்பை நம்ப வைத்து உண்மையான ஆட்டை ஆட்டைய போட்டது புரிய வந்தது. இதுகுறித்து அங்கிருந்த மக்களிடம் அவர் கூறியுள்ளார்.
வீட்டுக்கு ரிட்டர்ன்
இதை கேட்டு அனைவரும் சிரித்தனர். இதையடுத்து தனது விதியை நொந்து கொண்டு மார்க்கெட்டை விட்டு வீட்டுக்கு சென்றார். இதை பார்க்கும் போது செந்தில் ஒரு படத்தில் ஆட்டு தோல் விற்பவரிடம் ஒரு தோலை வாங்கி அதை நாய்க்கு போட்டு ஆடு என்று கவுண்டமணியிடம் விற்பனை செய்ததுதான் நினைவுக்கு வருகிறது.