உச்சநீதிமன்றம் vs நீதிபதி.. இந்தியா கண்டிராத இடியாப்பச் சிக்கல்!
உச்சநீதிமன்றம்vsநீதிபதி என்ற இந்த ஒரு அசாதாரண நிலைக்கு தீர்வு கிடைத்தால்தான், இந்திய நீதித்துறை மாண்பு காக்கப்படும். இப்போதைய இந்திய ஜனநாயகத்தின் அவசர தேவையும் இதுதான்.
டெல்லி: இந்திய ஜனநாயகத்தின் இக்கட்டான சூழ்நிலை இப்போது நிலவுகிறது. இதை சரி செய்து, மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நீதித்துறையின் கரங்களில் உள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். தலைமை நீதிபதி பிறப்பித்த உத்தரவை வழக்காக எடுத்து, அதற்கு தடை விதித்தார் கர்ணன். இதுதான் கர்ணன் எடுத்த முதல் சர்ச்சைக்குரிய நடவடிக்கை.
இதுகுறித்து, உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதும், கர்ணன் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு, அவர் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். இருப்பினும்விடவில்லை, கர்ணன். இந்த உத்தரவை எதிர்த்து பிரதமர் அலுவலகம், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு புகார் மனுக்களை அனுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார் கர்ணன்.

அவமரியாதைக்கு காரணம்
மேலும், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பினார் கர்ணன். அந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து பிரதமருக்கும் கடிதம் எழுதியிருந்தார். தான் ஒரு தலித் என்பதால் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (அப்போதைய) சஞ்சய் கிஷண் கவுல் தன்னை அவமரியாதை செய்வதாகவும், ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

உச்சநீதிமன்றம் உத்தரவு
இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இவ்வழக்கில்தான் தற்போது கர்ணனுக்கு 6 மாத சிறை தண்டனை விதித்துள்ளது உச்சநீதிமன்றம். இந்திய வரலாற்றிலேயே ஹைகோர்ட் நீதிபதி ஒருவருக்கு உச்சநீதிமன்றம் சிறை தண்டனை விதிப்பது இதுதான் முதல் முறையாகும்.

நீதித்துறையின் மறக்க முடியாத நாட்கள்
கர்ணனுக்கு மனநல மருத்துவ பரிசோதனை நடத்த உத்தரவிட்டதும், அதை எதிர்த்து கர்ணன் சில உச்சநீதிமன்ற நீதிபதிகள் பற்றி கூறிய கருத்துக்களும் நீதித்துறை வரலாற்றில் அழிக்க முடியாத எழுத்துக்களாக பதிவாகியுள்ளன.

எதிர்ப்பு மற்றும் ஆதரவு
இதில் பல்வேறு அம்சங்கள் மக்களால் விவாதிக்கப்படுகின்றன. கர்ணன், தலித் என்பதால்தான் தன்மீது வன்கொடுமை கட்டவிழ்த்துவிடப்படுவதாக அவராகவே பிரகடனப்படுத்துவதை சில மக்களால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது. இது சமூக வலைத்தளங்களில் எதிரொலிப்பதை பார்க்க முடிகிறது. கர்ணனுக்கு ஆதரவான கருத்துக்களும் சமூக வலைத்தளங்களில் எதிரொலிக்கின்றன.

தேவையற்ற சர்ச்சை
அதேநேரம், இதை தேவையற்ற சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது என்பது பெருவாரியான மக்கள் கருத்தாக உள்ளது. நீதிமன்றங்கள் மீது மக்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அதிலும் உச்சநீதிமன்றம் என்பது மத்திய, மாநில அரசுகளையே ஆட்டம் காண வைக்கும் அதிகாரம் கொண்டது என்ற எண்ணம் மக்கள் நெஞ்சங்களில் ஆழப் பதிந்துள்ளது.

நீதித்துறைக்கு களங்கம்
இப்படிப்பட்ட நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஹைகோர்ட் நீதிபதி ஏற்க மறுப்பதும், பதிலுக்கு அவர் உத்தரவை பிறப்பிப்பதும், ஒரு மோசமான முன் உதாரணமாகிவிடும் என்ற அச்சம் நீதித்துறை வட்டாரங்களில் உள்ளது. சாமானியர்களை போல நீதிபதிகள் மோதிக்கொள்வது அரசியலமைப்பின் மிக உயர்ந்த இடத்திலுள்ள நீதித்துறைக்கு களங்கம் ஏற்படுத்திவிடும் என்ற அச்சம் அவர்களிடம் உள்ளது.

ஜனநாயக தேவை
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டனை பெற்றுவிடக் கூடாது என்ற கோட்பாட்டில் நம்பிக்கையுள்ள இந்திய நீதித்துறை, உலகளவில் பெயர் பெற்றது. உச்சநீதிமன்றம்vsநீதிபதி என்ற இந்த ஒரு அசாதாரண நிலைக்கு தீர்வு கிடைத்தால்தான், இந்திய நீதித்துறை மாண்பு காக்கப்படும். இப்போதைய இந்திய ஜனநாயகத்தின் அவசர தேவையும் இதுதான்.
{promotion-urls}












Click it and Unblock the Notifications