2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் எங்கே? 50% உச்சவரம்பை நீக்குக-கர்நாடகாவில் ராகுல் சமூகநீதி வாய்ஸ்
கோலார்: 2011-ம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பகிரங்கப்படுத்த வேண்டும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பாக 50% என்பதை நீக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டன. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், ஜேடிஎஸ் இடையே மும்முனைப் போட்டி பிரதான போட்டியாக உள்ளது. ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளும் களமிறங்கி உள்ளன. ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலம் கோலாரில் ராகுல் காந்தி நேற்று பிரசாரம் செய்தார். இதே கோலாரில்தான் 2019-ம் ஆண்டு ராகுல் காந்தி லோக்சபா தேர்தல் பிரசாரம் செய்த போது பிரதமர் மோடி குறித்து விமர்சனங்களை முன்வைத்தார். இந்த விமர்சனங்களுக்காக அவதூறு வழக்கு தொடரப்பட்டு ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது குஜராத் சூரத் நீதிமன்றம்.
2 ஆண்டு சிறை தண்டை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டு அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து குஜராத் சூரத் அமர்வு நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இம்மேல்முறையீட்டு மனு மீது ஏப்ரல் 20-ந் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
இப்பின்னணியில் கோலாரில் நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, 2011-ம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட வேண்டும். மத்திய அரசுப் பணியில் 7% மட்டும்தான் ஓபிசி சமூகத்தினர் உள்ளனர். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு போதுமான பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்.
இடஒதுக்கீடு விவகாரங்களில் 50% உச்சவரம்பை உச்சநீதிமன்றம் நிர்ணயித்துள்ளது. இந்த 50% உச்சவரம்புதான் பல்வேறு மாநிலங்களின் இடஒதுக்கீடுகளுக்கு பெரும் முட்டுக்கட்டையாக உள்ளது. இதனை நீக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுகக் வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications