பிரகாஷ் ராஜ் தனது இமேஜை கெடுத்துக் கொண்டார்.. கர்நாடக பாஜக கடும் கண்டனம்
பெங்களூர்: அநியாயங்களை கண்டும், காணாததை போல இருக்கும் பிரதமர் மோடி தன்னைவிட சிறந்த நடிகர் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சனம் செய்ததற்கு கர்நாடக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
பாஜகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சுரேஷ்குமார், ஷோபா கரந்தலாஜே ஆகியோர் கூட்டாக இன்று பெங்களூரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது ஷோபா கூறுகையில், "பிரதமர் மோடி பற்றி விமர்சனம் செய்தால், ஒரே ராத்திரியில் நாடு முழுக்க பிரபலமாகிவிடலாம் என்று சிலர் கருதுகிறார்கள். மோடியை விமர்சனம் செய்ததன் மூலம், பிரகாஷ் ராஜ் தனது மீதான மதிப்புக்கு தானே கரி பூசிக்கொண்டுள்ளார்.

கடந்த மூன்றரை வருட காலத்தில் எந்த ஒரு ஊழல் புகாரும் இல்லாமல் மத்திய அரசை திறம்பட நடத்தி வருபவர் மோடி. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், உலக அரங்கில் இந்தியா தலைகுனிவை சந்தித்தது. காரணம், எங்கும், எதிலும் ஊழல் வியாபித்திருந்தது. இந்தியாவை தலைநிமிரச் செய்த பெருமை மோடியையே சேரும்.

மோடியை ஒருவர் விமர்சனம் செய்துவிட்டதாலேயே அவரது புகழுக்கு களங்கம் ஏற்பட்டுவிடாது. நாட்டின் நலனுக்காக ஓயாது பாடுபடுபவர் மோடி. பிரகாஷ் ராஜ் இப்படி பேசியது சரியில்லை என்றார்.
சுரேஷ் குமார் கூறுகையில், பிரகாஷ் ராஜ் ஒரு சிறந்த நடிகர். எனவேதான், பொது நிகழ்ச்சி மேடையை சினிமா என நினைத்து பயன்படுத்தியிருப்பார் என்று கிண்டலாக குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications