கர்நாடகாவில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பரிதாப சாவு: 6 நாள் போராட்டம் வீண்
பாகல்கோட்டை: கர்நாடகா மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில், திறந்திருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த 6 வயது சிறுவன் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், சடலத்தை மீட்க தொடர்ந்து பணி நடந்து வருகிறது.
பாகல் கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா சூலிகேரி கிராமத்தை சேர்ந்தவர் ஹனுமந்தகட்டி. இவரது மகன் திம்மண்ணா (6). கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் தனது தோட்டத்திலுள்ள சுமார் 300 அடி ஆழ போர்வெல் கிணற்றில் விழுந்துவிட்டான்.
இதைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக போர்வெல் அருகே பெரிய பள்ளம் பொக்லைன் உதவியால் தோண்டப்பட்டுவருகிறது. இதுவரை சுமார் 150 அடி ஆழத்துக்கு பொக்லைன் தோண்டியுள்ளது. 6வது நாளாக பணி நடைபெற்றுவரும் நிலையில், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிண வாடை வருவதும் இந்த சந்தேகத்தை உறுதி செய்துள்ளது.
பொக்லைன் மூலம் தோண்டப்படும் பள்ளத்தில் சுரங்கம் அமைத்துதான் சிறுவனின் உடலை கைப்பற்ற முடியும் என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர். எனவே தற்போது சடலத்தை மீட்கத்தான் போராட்டம் நடந்து வருகிறது. ஆக்சிஜன், தண்ணீர், சாப்பாடு இல்லாமல் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.