ஜெ. அப்பீல் தொடர்பாக விவாதிக்க கூட்டப்பட்ட கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் திடீர் தள்ளிவைப்பு
பெங்களூரு: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வது தொடர்பாக முக்கிய முடிவெடுக்க இன்று கூட்டப்பட்டிருந்த கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் திடீர் என தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
முதல்வர் சித்தராமையாவுக்கு வேறு வேலைகள் இருப்பதால் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதில் 25ம் தேதி மாலை 4 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. தமிழகத்தில் அத்தனை எதிர்க்கட்சிகளம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பாமக, தேமுதிக போன்றவை கர்நாடக முதல்வருக்கு நேரிலும், கடிதமும் மூலமாகவும் கோரிக்கை விடுத்துள்ளன.
ஆனால் கர்நாடகத்தில் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள் ஜெயலலிதா ஆதரவு அதிகமாக காணப்படுகிறது. கர்நாடக காங்கிரஸ் சட்டப் பிரிவு அப்பீல் செய்யக் கூடாது என்று கூறியுள்ளது. கர்நாடக மூத்த அமைச்சர் சிவக்குமாரும், ஜெயலலிதாவுக்கு ஆதரவாகவே உள்ளார்.
இவர்கள் தவிர முன்னாள் பிரதமர் தேவெ கெளடா உள்ளிட்ட கர்நாடக மூத்த தலைவர்களும் கூட ஜெயலலிதாவுக்கு எதிராகப் போக வேண்டாம் என்று சித்தராமையாவை வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான் இன்று நடைபெறுவதாக இருந்த அமைச்சரவைக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 25ம் தேதி இந்தக் கூட்டம் நடைபெறும். ஆனால் அதற்குள் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகி விடும் வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால் உச்சநீதிமன்றத்தில், தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை கோரும்போது, அது கிடைக்கும் வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று சட்ட வல்லுனர்கள் கூறியுள்ளது நினைவிருக்கலாம்.