தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா, இல்லையா? கர்நாடக அமைச்சரவை இன்று முடிவு #Cauveryverdict
பெங்களூர்: மேலும் மூன்று நாட்களுக்கு தமிழகத்திற்கு தண்ணீர்விடுமாறு சுப்ரீம் கோர்ட் கர்நாடகாவுக்கு உத்தரவிட்ட நிலையில்,முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று கர்நாடக அமைச்சரவை கூடி அதுபற்றி ஆலோசிக்க உள்ளது.
இந்த ஆலோசனையின்போது, கர்நாடக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டாமா, அல்லது சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டபடி, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.
கர்நாடகாவின் அனைத்து கட்சி பிரமுகர்களும், சுப்ரீம் கோர்ட் உத்தரவை ஏற்க கூடாது என்று கூறிவரும் நிலையில், கர்நாடக அரசு இக்கட்டில் சிக்கியுள்ளது.
இதனிடையே, கேபினட் மீட்டிங்கில் உரிய முடிவு எடுக்கப்படும் என்றும்,அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்வரை மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அமைச்சர் மகாதேவப்பா மற்றும் மகாதேவ பிரசாத் ஆகியோர், நேற்று மாலை, மைசூரில் நிருபர்களிடம் கூட்டாக தெரிவித்தனர்.