அப்துல் கலாம் இறுதி சடங்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, எடியூரப்பா பங்கேற்பு!
பெங்களூர்: ராமேஸ்வரத்தில் நாளை நடைபெறும் மக்களின் ஜனாதிபதி, அப்துல் கலாம் இறுதி சடங்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
அப்துல் கலாம் இறுதி சடங்குகள், இஸ்லாமிய முறைப்படி நாளை காலை நடைபெறுகின்றன. இதில் பங்கேற்பதற்காக கர்நாடக முதல்வர் சித்தராமையா, மதுரை, ராமநாதபும் வழியாக ராமேஸ்வரம் செல்ல உள்ளார். முன்னாள் முதல்வரும், பாஜக தேசிய துணை தலைவருமான, எடியூரப்பாவும், ராமேஸ்வரம் சென்று கலாமுக்கு இறுதி அஞ்சலி செலுத்துகிறார்.
கர்நாடகாவிற்கும் கலாமுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்து வந்தது. கலாம், ஜனாதிபதியாக பதவி வகித்தபோது, கர்நாடக சட்டசபையில் சிறப்புரையாற்றியுள்ளார். கர்நாடக மாநில வளர்ச்சிக்காக 'புரா' என்ற ஒரு வரைவு திட்டத்தை கலாம் உருவாக்கி கொடுத்தார். இதை படிப்படியாக கர்நாடக மாநிலம் செயல்படுத்தி வருகிறது.