கண் தானம் செய்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா..!
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது கண்களை தானம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
கன்னட நடிகர் ராஜ்குமாரின் நினைவு மண்டப திறப்பு விழா பெங்களூருவில் இன்று நடைபெற்றது. அதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, நடிகர்கள் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்ட பல விஐபிகள் பங்கேற்றனர்.
நடிகர் ராஜ்குமார் கண்தானம் செய்யுமாறு தனது ரசிகர்களை கேட்டுக்கொண்டவர். அவரும் தானம் செய்தவர். ராஜ்குமார் மரணத்திற்கு பிறகு அவரது கண்கள், பார்வையிழந்த வேறு ஒரு நபருக்கு பொருத்தப்பட்டன. கர்நாடகாவில், இதுவரை, ராஜ்குமாரின் ரசிகர்கள் 90 ஆயிரம் பேர் கண்தானம் செய்ய ஒப்புதல் வழங்கியுள்ளனர்.
நடிகர் ராஜ்குமாரைப்போலவே, முதல்வர் சித்தராமையா தனது கண்களையும் தானம் செய்ய முன்வந்து அதற்கான அறிவிப்பை ராஜ்குமார் நினைவு மண்டப திறப்பு விழாவிலேயே அறிவித்தார். மேலும், கண் தானம் செய்வது தொடர்பான ஆவணங்களிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார். கர்நாடக முதல்வரின் இந்த செயலால் மாநிலம் தழுவிய அளவில் கண்தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.